சமையல் குறிப்பு : 1
பழைய சினிமா பாடல்களைக் கேட்டால் பாய்ந்து ரேடியோவை மூடும் இளைஞர் கூட்டம். தற்போது பழைய பாடல்களை புதிய உத்தியில் கேட்டால் ரசிக்கிறார்கள். இதனையே கர்நாடக இசையில் ஜீகல் பந்தி என அழைக்கிறார்கள். அதாவது பாரம்பரிய பாணி அல்லாது புதிய இசைக் கருவிகளை இணைத்து இசைப்பது. இதற்கு ஆரம்ப காலத்தில் பயங்கர எதிர்ப்பு. தற்போது ஜீகல் பந்தி மட்டுமே ரசிக்கும் ரசிகர் கூட்டம் வலையப்பட்டி+ யு.சீனாவாஸ் - குன்னக்குடி + வலையப்பட்டி என புதிய கூட்டணிகள்.
அதேபோன்று வழக்கம் அல்லாத புதிய கூட்டணியில் செய்யும் புதிய சமையலும் இளைஞரிடம் வரவேற்பு இருக்கும். உதாரணம் பாஸட் புஃட். இதனை நாமே ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற சிந்தனையின் விளைவுதான் இந்த தேடல் அதற்கு அறுசுவை (ஜீகல்) பந்தி எனப் பெயர் வைக்கலாமா?
பந்தி 1
கலர்புஃல் கீரை
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்யும் போது கீரை வெந்ததும் சிறிது கேரட்டைத் துருவி சேர்க்கவும். கடைசியாக தேங்காய் சேர்க்கவும். கலர் புஃல் கீரை ரெடி இந்தியா 2005 என்றும் பெயர் வைக்கலாம். ஆரஞ்சு, வெண்மை, பச்சை என அசத்தலான சத்தான சுவையான சைட் டிஷ் ரெடி.
பந்தி 2
மேற்படி கீரை 1/2 கப், பொலபொலப்பாக வதக்கவும். 1 கப் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறினால் சுவையான மதிய லஞ் ரெடி. பொரித்த வடகம் சூப்பர் காம்பினேஷன்
பந்தி 3
மேற்படி கீரையை பூரணமாக வைத்து மோதகம் செய்தால் கொலஸ்ட்ராலுக்கு குப்பை. மோதகம் செய்ய வராது என்பவர்கள், மோதகமாவில் கீரையைப் பிசைஞ்சு பிடி கொழுக்கட்டையாக செய்யலாம்.
பந்தி 4
மேற்படி கீரையில் சமோசா செய்யலாம். சமோசா மாவில் சிறிது காரப்பொடி சேர்த்தால் சுவையோ சுவை.
பின்குறிப்பு
சுவையில் வீட்டினரும், பாராட்டி, நீங்களும் பூரி (பெரு)த்துப் போனால் நான் பொறுப்பு அல்ல.
சமையல் குறிப்பு : 2
அறுசுவை ஜீகல் பந்தி
இன்றைய நவீன உலகில் ஊட்டச்சத்துபானம் அன்றாடத் தேவையும், அத்தியாவசியத் தேவையும் ஆகிவிட்டது. விலையும் மாதந்தோறும் உயர்கிறது. நமது பட்ஜெட்டும் உயர்கிறது. எனவே பட்ஜெட்டில் துண்டு மட்டுமல்ல வேட்டியே விழுகிறது. அப்படியும் போதுமான ஊட்டம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. விலையின் அதிர்ச்சியில் உள்ள ஊட்டமும் குறைகிறது. இப்போது குறைந்த செலவில் நிறைந்த ஊட்டம் மிகுந்த பானம் தயாரிப்போமா?
பந்தி 1
ஊட்டச்சத்து பானம்
அரை லிட்டர் பால், 100 கிராம் கேரட், 2 ஏலக்காய் முடிந்தால் முந்தரி 4, குங்குமப்பூ சிறிது (அல்லது) தேங்காய் துருவல் 2 ஸ்பூன் தேவையான அளவு சீனி
கேரட்டை வேக வைத்து தோலை உரித்துப் பிசையவும். அத்துடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அடித்த விழுதை பாலில் சேர்த்துக் காய்ச்சி சீனி சேர்க்கவும். சூடாகவோ, குளிர வைத்தோ பருகவும்.
பந்தி 2
மேற்படி கலவையில் கேரட்டிற்குப் பதிலாக பீட்ரூட் சேர்த்து மேற்படி முறையிலேயே பருகலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். திடீரென கெஸ்ட் வந்து விட்டால் ஐஸ்கட்டி சேர்த்து உடன் கொடுக்கலாம். சாப்பிட்ட கெஸ்ட் அடிக்கடி உங்கள் வீட்டிற்குப் படை எடுப்பார்கள். ஜாக்கிரதை.
பந்தி 3
ரோஜாப்பூவை உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும். பூக்கடையில் ரோஜாப் பூக்கள் மலிவாகக் கிடைக்கும். கோவில்களில் சுவாமியின் நிர்மால்யம் கிடைத்தால் மிகவும் விசேஷம். காய்ச்சிய பாலில் அரைச் சிட்டிகை ரோஜா இதழ்ப்பொடி, 1 ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்துப் பருகினால் சுவையோ சுவை. சத்தோ சத்து.
பின்குறிப்பு
கணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மேற்படி பானங்களை வழங்கி விட்டு நீங்கள் அதன் சுவையில் திளைக்கும்போது ஆடித் தள்ளுபடியில் ஐந்து புடவை உங்கள் மனைவிகள் கேட்டால் பலமாக 'உம்' கொட்டி விடுவீர்கள் சுவை மயக்கத்தில். அதற்கு நான் பொறுப்பு அல்ல.
சமையல் குறிப்பு : 3
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமாகப் போண்டா செய்வோமா?
பந்தி 1:
மைசூர் போண்டா
1/4 கிலோ உளுத்தம் பருப்பை ஊற வைத்துக் கழுவி உப்பு பெருங்காயம் சேர்த்துக் கெட்டியாக பூக்க அரைக்கவும். 2 ஸ்பூன் மிளகு, கறிவேப்பிலை, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் ஒருமுடி, அனைத்தையும் நன்கு கலந்து எண்ணெயில் உருட்டி போட்டு சிவக்க எடுக்கவும்.
பந்தி 2:
உருளைக்கிழங்கு போண்டா
1/4 கிலோ உ.கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து மசிக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உ.பருப்புத் தாளித்து உ.கிழங்கை உப்பு சேர்த்துக் கிளறி சிறு உருண்டையாக உருட்டவும். 100 கிராம் கடலை மாவு, 50 கிராம் பச்சரிசி மாவு, உப்பு தேவையான அளவு, காரப்பொடி 2 ஸ்பூன், சோடா உப்பு 2 சிட்டிகை சேர்த்து தோசை மாவு பதத்தில் கெட்டியாகக் கரைக்கவும். உருண்டையை மேற்படி மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
பந்தி 3:
வெஜிடபிள் போண்டா
கோஸ், காரட் 50 கிராம், வெங்காயம் 100 கிராம், பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலை 2 கொத்து, அனைத்தையும் நைசாக நறுக்கவும், அத்துடன் 100 கிராம் கடலை மாவு, 50 கிராம் பச்சரிசி மாவு, உப்பு சிறிது காரப்பொடி, சோடா உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து எலுமிச்சம்பழ சைசில் உருட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி போண்டா வகைகளை தேங்காய் சட்னியில் தோய்த்து சாப்பிட சுவையோ சுவை. கோடை விடுமுறையில் வரும் விருந்தினர்களை போண்டா செய்து அசத்தலாம்.
சமையல் குறிப்பு: 4
அறுசுவை ஜீகல் பந்தி
இப்போது தேங்காய் சீசன். எனவே தேங்காயில் இனிப்புகள் செய்து அசத்தலாம்
பந்தி 1
தேங்காய் அல்வா
ஒரு முற்றியத் தேங்காயைத் துருவி 50 கிராம் பச்சரிசி சேர்த்து நைசாக அரைக்கவும். 1/2 கிலோ வெல்லத்தில் 1/2 டம்பளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சயும். கம்பி பதம் வந்ததும் அரைத்தத் தேங்காயைச் சேர்த்து அல்வா பதம் வரும்வரை நன்கு கிளறவும். சிறிது ஏலக்காய்த் தூள், 4 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி வைக்கவும்.
பந்தி 2
தேங்காய் பர்பி
ஒரு நெற்றுத் தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியைக் கம்பி பாகு வைத்து அதி வறுத்தத் தேங்காயைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். மைசூர்பாகு பதம் போல் பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியபின் வில்லை போடவும். மேலே முந்திரி, திராக்ஷை தூவி, கலர் பவுடர் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 3
பால் பர்பி
ஒரு முற்றியத் தேங்காயை கறுப்பு விழாமல் துருவவும். 1/2 லிட்டர் பால், 1/2 கிலோ சீனி, ஏலக்காய்தூள், தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பால்கோவா பதத்தில் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் ஊற்றி வில்லை போடவும். முந்திரி, திராக்ஷை மேலே தூவவும். "எல்லோ" பவுடர் சிறிது சேர்க்கலாம்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி இனிப்புகள் எளிமையாகச் செய்யக்கூடியவை. பதம் தவறி வரும் என்ற பயம் இல்லா இனிப்புகள். வளரும் குழந்தைகளுக்குக் குறைந்த செலவில் நிறைந்த ஊட்டம் தரும் இனிப்புகள்.
சமையல் குறிப்பு: 5
அறுசுவை ஜீகல் பந்தி
லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆராஅமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)
பந்தி 1
பாகு இடியாப்பம்
200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளவும்.
பந்தி 2
ஜீனி இடியாப்பம்
100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.
பந்தி 3
பருப்பு இடியாப்பம்
100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.
பந்தி 4
உப்புமா இடியாப்பம்
கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.
இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.
சமையல் குறிப்பு: 6
அறுசுவை ஜீகல் பந்தி
சுவையான பஜ்ஜி வகைகள் செய்வோமா?
பந்தி 1
\
கடலை மாவு பஜ்ஜி
100 கிராம் கடலை மாவு 50 கிராம் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, இரண்டு சிட்கை சோடா உப்பு ஒன்றாகக் கலக்கவும். 5 மிளகாய் வற்றல் பெருங்காயம் - உப்பு சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாழைக்காய் - உருளைக்கிழங்கு - கத்தரிக்காய் - வெங்காயம் சிலைசுகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
பந்தி 2
கோதுமை மாவு பஜ்ஜி
கடலை மாவு அலர்ஜி உள்ளவர்கள் அதற்கு பதிலாக கோதுமை மாவில் மேற்படி முறையில் பஜ்ஜி செய்யவும்.
பந்தி 3
கதம்ப பஜ்ஜி
வாழைக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய்கீற்று, முட்டைக்கோஸ், கேரட், கத்தரிக்காய் அனைத்தையும் நீளவாட்டில் நைசாக நறுக்கி மேற்படி மாவில் பிசிறி எண்ணெயில் தூவி சிவக்கப் பொரித்து எடுக்கவும். ஒவ்வொரு ஈடு பொரிக்கும் போதும் தனித்தனியே காய்கறி கலக்கவும். மொத்தமாகக் கலந்தால் மாவு நீர்த்துப் போய் விடும்.
சட்னி
அரை மூடித் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். (புளி, மிளகாய் வேண்டாம்). கடுகு, வெங்காயம், உ.பருப்பு, கறிவேப்பிலைத் தாளிக்கவும். இது ஈசியாகச் செய்யும் எளிமையான டிபன். மைதா கலப்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காது. எனவே பயமின்றி 'கொலஸ்ட்ரால்' உள்ளவர்களும் அடிக்கடி சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு: 7
அறுசுவை ஜீகல் பந்தி
வாழைத்தண்டு! இது மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இதை அதிகம் சமைப்பது இல்லை. இதில் விதவிதமாக ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1
வாழைத்தண்டு பச்சடி
நைசாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், 2 பச்சை மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளி கரைத்துவிட்டு 50 கிராம் வெல்லம் சேர்க்கவும். பின்னர் அரை மூடி தேங்காய் அரைத்து அத்துடன் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் கடுகு உ.பருப்பு தாளிக்கவும்.
பந்தி 2
வாழைத்தண்டு மோர்க் கூட்டு
நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் அரைமூடி தேங்காய் அரைத்து சிறிது பச்சரிசி மாவு சேர்த்து இரண்டு பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம், தனியா தட்டிப் போட்டு நன்கு கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். ஆறியபின் 100 மில்லி தயிர் சேர்க்கவும்.
பந்தி 3
வாழைத்தண்டு துவட்டல்
2 ஸ்பூன் பயத்தம் பருப்பை ஊறவைக்கவும். இரண்டு வற்றல், மிளகாய், கடுகு, உ.பருப்பு தாளித்து நறுக்கிய வாழைத் தண்டைப் பிசைந்து சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி, ஊறிய ப.பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி எடுக்கவும். முன்னதாகப் பிசைந்து வைத்தால் தண்ணீர் வடிந்து சத்து வெளியேறிவிடும். சாம்பாரிலும் வாழைத்தண்டைப் போடலாம்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு மருத்துவ குணம் கொண்டது. இதன் சாறைத் தொடர்ந்து பருகிவர சிறுநீரகக்கல் கரையும். எனவே வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவது நலம்.
சமையல் குறிப்பு - 8
அறுசுவை ஜீகல் பந்தி
குடும்பத்தினர் மனம் மகிழும் வண்ணம் மகிழம்பூ முறுக்கு செய்வோமா?
பந்தி 1
முள்ளு முறுக்கு - மகிழம்பூ முறுக்கு
ஒருபடி பச்சரிசியை கழுவி ஊற வைத்து உலர்த்தி மிக்ஸியில் இடித்து நைசாக சலித்து ஆவி வரும் வரை வறுக்கவும். அத்துடன் சிவக்க வறுத்து அரைத்த பயத்தம் மாவு 150 கி கலக்கவும். ஒரு முற்றிய தேங்காயைத் துருவி 1/2 லிட்டர் பால் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன் உப்பு, 4 ஸ்பூன் எள், சிறிது ஏலக்காய், 200 கி. சீனி சேர்த்து கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் மாவில் ஊற்றிப் பிசைந்து மகிழம்பூ அச்சில் பிழிந்து பிஸ்கட் நிறம் வந்ததும் எடுக்கவும். சூடு ஆறிய பின்னர்தான் மொரமொரப்பு வரும்.
பந்தி 2
சீப்பு முறுக்கு
மேற்படி மாவை சீப்பு முறுக்குக் கட்டையில் எண்ணெய் தடவி மெல்லிய வட்டமாய்த் தட்டவும். 2 முனையையும் குழாய் போல் ஒட்டி 1/2 மணி நேரம் உலர விடவும். பின்னர் பொரிக்கவும். கொய்யா இலையின் பின்புறத்தில் எண்ணெய் தடவி மேற்படி முறையில் செய்யலாம்.
பந்தி 3
இனிப்பு பிஸ்கட்
மேற்படி, மாவில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா நறுக்கி சேர்த்துப் பிசைந்து சுத்தமான துணியில் வட்டமாகத் தட்டி உலர்ந்த பின் பொரித்து விடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி ஐட்டங்களை அடிக்கடி செய்து அசத்தினால் குடும்பத்தினர் மனம் மகிழும். வீட்டில் அமைதி கொஞ்சும்.
சமையல் குறிப்பு - 9
அறுசுவை ஜீகல் பந்தி
செட்டி நாட்டுப் பலகாரமான மனோலம் செய்வோமா? மற்றும் அப்பம் செய்வோமா?
பந்தி 1
மனோலம்
1/2 கிலோ பச்சரிசி 50 கிராம் ப.பருப்பு சேர்த்து மிஷினில் நைசாக அரைக்கவும். அரைத்த மாவை இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து. பூந்தியாக தீத்தவும். நன்கு மொறு மொறு என்று காராபூந்தி பதத்தில் அரித்து எடுத்து பேப்பரில் கொட்டவும்... அதிக எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும்.
பின்னர் ஒரு தேங்காயை பல் பல்லாக அரிந்து சிவக்க வறுக்கவும். 100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 1/2 கிலோ வெல்லத்துடன் வறுத்த தேங்காய் 2 ஏலக்காய் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கம்பிப் பாகு வைக்கவும். பாகில் வறுத்த எள், 1/4 கிலோ பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்த காராபூந்தியைக் கொட்டிக் கிளறவும். கார்த்திகைக்கு அவல் கிளறுவது போல கரகர மொர மொர சுவையும் இனிப்பும் கலந்த வித்தியாசமான இனிப்பு இது. இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 2
அப்பளம்
பச்சரிசி 100 கிராம், புழுங்கல் அரிசி 100 கிராம், து. பருப்பு 20 கிராம், ஒரு மூடி தேங்காய், 2 ஏலக்காய் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் காய்ந்த எண்ணெயில் ஒரு கரண்டி எடுத்து விடவும். மேலே முறுகலாக வந்ததும் எடுத்து விடவும். ஒன்று ஒன்றாகத் தான் ஊற்ற வேண்டும். சற்றே எண்ணை குடிக்கும். எண்ணெய் வேண்டாதவர்கள் குழிப்பணியார சட்டியில் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு
இவை இரண்டும் நகரத்தார் வீடுகளில் சிறப்பு மிக்க ஐட்டங்கள்.
சமையல் குறிப்பு - 10
அறுசுவை ஜீகல் பந்தி
சத்து நிறைந்த சூப் தயாரிப்போமா? இதை சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். வயதானவர்கள் இதை காலை நேர உணவாகவே சாப்பிடலாம். இளையவர்கள் சப்பாத்தியும் சூப்பும் சாப்பிடலாம். சப்பாத்தி என்றாலே சிலருக்கு அலர்ஜி. மிருதுவான சப்பாத்தி செய்து அசத்துவோமா? கூடவே எளிமையான சைட்டிஷ்ஷாக டால் (பருப்பு).
பந்தி 1
வெஜிடபிள் சூப்
தக்காளி, கோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தலை 4 ஸ்பூன் துருவல். இரண்டு கொத்து முருங்கைக் கீரை. 50 கிராம் நறுக்கிய வெங்காயம். கீறிய ப. மிளகாய் ஒன்று, 4 ஸ்பூன் ஓட்ஸ், அல்லது சம்பா கோதுமை குருணை, அல்லது அவல் இவை எல்லாவற்றையும் 4 டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைய வேகவிடவும். வெந்ததும் 1/2 ஸ்பூன் மிளகு தட்டிப் போட்டு ஒரு துண்டு இஞ்சி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சாப்பிடவும்.
பந்தி 2
சப்பாத்தி
100 கிராம் கோதுமை மாவு இரண்டு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் ஜீனி, 2 ஸ்பூன் தயிர் அனைத்தையும் சேர்த்து ஒரே முறையில் தண்ணீர் விட்டுத் திரட்டி ஈரத்துணியில் மூடி நான்கு மணிநேரம் கழித்து சப்பாத்தி இட்டு இருப்புச் சட்டியில் போட்டு எடுக்க தோசையை விட மிருதுவான சப்பாத்தி ரெடி.
பந்தி 2
டால்
50 கிராம் பயத்தம் பருப்புபை குழைய வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் மஞ்சள் பொடி, உப்பு, 2 ப. மிளகாய், 50 கிராம் சிறிய வெங்காயம் நறுக்கி கடுகு தாளித்து வதக்கிச் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்து சிறிது ப.அரிசி மாவு கரைத்து விடவும். தேவைப்பட்டால் காரட் துறுவல் சேர்க்கவும்.
சமையல் குறிப்பு - 11
அறுசுவை ஜீகல் பந்தி
வாழைக்காயில் சிப்ஸ், ரோஸ்ட் அல்லாமல் வேறு ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1: வாழைக்காய் பொரியல்
1 முற்றிய வாழைக் காயைத் தோல் சீவி இரண்டாக வகிர்ந்து பிஸ்கட் கனத்தில் நறுக்கிக் கழுவவும். 1/4 லிட்டர் கழுநீரில் 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். கடுகு, உ. பருப்பு, நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் 4 ஸ்பூன், 1 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளித்து வாழைக்காயைச் சேர்த்துப் புரட்டவும். பொலபொலவென்று வேக வைத்தப் பருப்பு ஒரு கப், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
பந்தி 2: வாழைக்காய்ப் பொடிமாஸ்
1 வாழைக்காயை முழுசாகக் குக்கரில் வேக வைக்கவும். தோல் உரித்து சற்றே மசித்து உப்பு சேர்த்துப் பிசிறவும். 50 கிராம் சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நறுக்கி கடுகு, உ. பருப்புடன் தாளித்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வாழைக்காய் பொடியைச் சேர்த்துப் புரட்டவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் கதம்ப அவியல்
வாழைக்காய் ஒன்று, சர்க்கரை வள்ளிக்கிழங்கு 100 கிராம், பறங்கிப்பழக் கீற்று நூறு கிராம் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி 1/2 லிட்டர் கழுநீரில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து. நன்கு வேகவைக்கவும். வெந்ததும் 4 ஸ்பூன் வெல்லத் தூள் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் ஒரு மூடி தேங்காயை அரைத்து கடைசியாக 4 சின்ன வெங்காயம், சிறிது சீரகம் சேர்த்து லேசாகத்தட்டி 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வெந்தகாயில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகு, உ, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
சமையல் குறிப்பு - 12
அறுசுவை ஜீகல் பந்தி
புதுவிதமாக காரக் கறிகள் செய்வோமா?
பந்தி 1: முள்ளங்கி உசிலி
100 கிராம் முள்ளங்கியைக் கழுவி கட்டையில் துருவிக் கொள்ளவும். ஊறவைத்த து.பருப்பு 4 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, உப்பு சேர்த்து அரைத்து முள்ளங்கியில் பிசிறவும். சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும். 100 கிராம் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கடுகு, உ, பருப்பு தாளித்து அனைத்தையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பச்சைக் கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
பந்தி 2: உருளைக்கிழங்கு உசிலி
100 கிராம் உ. கிழங்கைத் தோல் சீவிக் கட்டையில் துருவி கழுவவும். 100 கிராம் பெரிய வெங்காயம் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 3: வாழைக்காய் உசிலி
1 முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி கட்டையில் துருவிக் கொள்ளவும். அத்துடன் 100 கிராம் பெரிய வெங்காயம் நறுக்கிச் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 4: வாழைப்பூ உசிலி
வாழைப்பூவை நறுக்கி அரை வேக்காடு வேக வைக்கவும். வெங்காயம் சேர்க்காது மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 5: கொத்தவரங்காய் உசிலி
100 கிராம் கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி அரை வேக்காட்டில் வேகவைத்து வெங்காயம் சேர்காது செய்யவும்.
பீன்ஸையும் இதேபோல் செய்யலாம்.
பின் குறிப்பு
மேற்படி உசிலிகளை சாதத்தில் எண்ணெய் விட்டுச் சாப்பிலாம். ரசம் சாதம், மோர்க்குழம்பு சாதத்திற்கு சைடிஷ்ஷாகாவும் உபயோகிக்கலாம்.
சமையல் குறிப்பு - 13
அறுசுவை ஜீகல் பந்தி
பாரம்பரிய விருந்தில் பச்சடிக்கு முக்கியப் பங்கு உண்டு. பச்சடி வகைகள் பார்ப்போமா?
பந்தி 1: மாங்காய் பச்சடி
1/4 கிலோ மாங்காயை தோல் சீவி சிலைஸ்களாக செதுக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் பொடி, 4 ப.மிளகாய், செதுக்கிய மாங்காய் அனைத்தையும் 1 டம்ளர் தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். வெந்ததும் 100 கி. வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் 1/2 மூடி தேங்காயை அரைத்து 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். 2 நிமிடம் கொதித்தபின் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும்.
பந்தி 2: தக்காளிப் பச்சடி
1/4 தக்காளிப் பழத்தை மேற்கூறிய வகையில் செய்யவும்.
பந்தி 3: வாழைத்தண்டு பச்சடி
1/4 கிலோ இளம் வாழைத்தண்டை நைசாக நறுக்கி 2 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எலுமிச்சம் பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கிராம் வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் 1/2 மூடி தேங்காய் அரைத்து, 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உ.பருப்பு தாளித்து இறக்கவும்.
பந்தி 4: பூசணிக்காய் பச்சடி
1/4 கிலோ பிஞ்சு பூசணிக்காயை பொடியாக நறுக்கி மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 5: வெண்டைக்காய் பச்சடி
1/4 கிலோ பிஞ்சு வெண்டைக்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும். 4 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எ.பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கி. வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் தேங்காய் அரைத்து ப.மாவு சேர்த்து கரைத்து விட்டுத் தாளிக்கவும்.
சமையல் குறிப்பு - 14
அறுசுவை ஜீகல் பந்தி
உருண்டைக் குழம்பு செய்வது சற்றே 'ரிஸ்க்' ஆன விஷயம். எனவே இதனை இளைய தலைமுறையினர் செய்யத் தயங்குகின்றனர். எளிமையாகச் செய்து பார்ப்போம். இதன் சுவை அதிகம். எனவே அனைவரும் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.
பந்தி 1: உருண்டைக் குழம்பு
து. பருப்பு 100 கிராம், க.பருப்பு 100 கிராம் ஊற வைத்து சிறிது உப்பு, 2 வற்றல் சேர்த்துக் கெட்டியாகவும், நைசாகவும் அரைக்கவும். 200 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் பூண்டு நைசாக நறுக்கிச் சேர்த்து, ஒரு மூடி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி, உருண்டையை உருட்டி வேக விடவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் கழிநீரில் கரைத்து 4 ஸ்பூன் மிளகாய்த் தூள் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு வாசனை வரும் வரை மிதமானத் தீயில் கொதிக்க விடவும். நைசாக அரிந்த சின்ன வெங்காயம் ஒரு கை கறிவேப்பிலை, வெந்தயம் 1 ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், து.பருப்பு 1 ஸ்பூன் தாளித்து, எலுமிச்சம்பழ அளவு தேங்காய் அரைத்து விட்டு நன்கு கொதித்தபின் இறக்கி வைக்கவும். வடகம் தாளித்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: புளிக்குழம்பு
பிஞ்சு கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய். இதில் ஏதோ ஒரு காயுடன் 50 கிராம் பூண்டு வதக்கிச் சேர்த்து மேலே கூறியபடி உருண்டைக்குப் பதிலாக சேர்த்து மேற்படி முறையில் தாளிக்கவும். சுட்ட அப்பளம் அல்லது வத்தல், வடகம், அப்பளம்ப்பூ பொரித்தால் செம கூட்டணி. மேற்படிக் குழம்பு வகைகள் செய்யும்போது சாதம் கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும்.
சமையல் குறிப்பு - 15
அறுசுவை ஜீகல் பந்தி
இது மாங்காய் சீசன். எனவே புளிக்காமல் புதுவிதமான ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1: மாங்காய் பொரித்த குழம்பு
புளிப்பு, நார் இல்லாத மாங்காய் 1/4 கிலோ. இதனை கொட்டையுடன் சிறுசிறு துண்டுகளாக 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு 100 கிராம், ஒரு மூடி தேங்காய் அரைத்த விழுது, 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் தாளிக்கவும். இதை நெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடு டிஷ்ஷாகவும் உபயோகிக்கலாம்.
பந்தி 2: மாங்காய் காரக்குழம்பு
நார், புளிப்பு இல்லாத ஒரு மாங்காயைத் தோல் சீவி சிலைசாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கவும். நன்கு வதங்கியபின் எலுமிச்சை அளவு புளியை கடுகு, வெந்தயம், க.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 1 ஸ்பூன் வெந்தயம், சிறிது மஞ்சள், 4 மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் குழம்பில் சேர்த்து வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும். சுட்ட அப்பளம் சிறந்த கூட்டணி.
பந்தி 3: மாம்பழ ஜாம்
1/4 கிலோ மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் ஓட்டவும். 1/4 கிலோ சீனியில் 2 ஏலக்காய் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சவும். கம்பி பாகு வந்ததும் அரைத்த மாம்பழத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். காய்ச்சி ஆறிய பாலில் கலந்து குளிர வைத்துச் சாப்பிடலாம். பிரட் டோஸ்ட் செய்து நடுவில் இந்த ஜாமை வைத்து சாண்ட்விச்சாகச் சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு - 16
அறுசுவை ஜீகல் பந்தி
தற்போது 'கூல்டிரிங்ஸ்' கடைகளில் கேப்பைக் கூழை 'கூழ்டிரிங்ஸ்' என்ற பெயரில் பானமாக விற்கிறார்கள். நாம் கூழையே டிபனாகக் கொடுத்த அசத்துவோமா?
பந்தி 1: புளிக்கூழ்
1/4 கி. புழுங்கல் அரிசியை ஊற வைத்து நைசாகக் கிரைண்டரில் அரைக்கவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும். 6 மிளகாய் வற்றல் 1 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் க. பருப்பு, 4 ஸ்பூன் நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்த்து உப்பு போடவும். 1 ஸ்பூன் வெந்தயம் 1 துண்டு மஞ்சள் எண்ணெய் விடாது வறுத்துப் பொடித்து போட்டு மாவைக் கைவிடாமல் வதக்கி கூழ் மாதிரி அடுப்பில் ஏற்றிக் கிண்டவும். கெட்டியாக வந்ததும் 4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டுக் கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைக்கவும். பின் தட்டில் ந. எண்ணெய் தடவி அல்வா போல் ஊற்றி மேலேயும் சிறிது நல்லெண்ணெய் விட்டு ஆறியதும் வில்லை போட்டும் சாப்பிடலாம். சூடாக அப்படியேவும் சாப்பிடலாம்.
பந்தி 2: எலுமிச்சைக் கூழ்
மேலே குறிப்பிட்ட வகையில் கூழ் கிளறி புளிக்கு பதிலாக 2 எலுமிச்சம்பழம் பிழிந்து 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 3: மோர்க்கூழ்
மேலே குறிப்பிட்ட வகையில் தண்ணீருக்குப் பதிலாக 3/4 லிட்டர் மோர் சேர்த்துக் கிளறவும். பெருங்காயம் வேண்டாம். ஒரு துண்டு இஞ்சி தட்டிச் சேர்க்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மீசையில் ஒட்டாத இது போன்ற கூழ் வகைகளைச் செய்து கொடுத்து அசத்தினால் வீட்டில் மீசை முறுக்கி புரட்சி செய்வது குறையும். பதிலாக கூழ் வாழ்க என்று மீசை முறுக்கிக் கோஷம் போடுவர் கூலாக!
சமையல் குறிப்பு - 17
அறுசுவை ஜீகல் பந்தி
லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆர அமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)
பந்தி 1: பாகு இடியாப்பம்
200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 2: ஜீனி இடியாப்பம்
100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.
பந்தி 3: பருப்பு இடியாப்பம்
100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு. உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை, மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.
பந்தி 4: உப்புமா இடியாப்பம்
கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.
இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.
சமையல் குறிப்பு - 18
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமாகக் கேக் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். கடையில் பாக்கெட்டைக் கிடைக்கும். எனவே வீட்டிலேயே விதம் விதமாகக் கேக் செய்வோமா?
பந்தி 1: ரவா கேக்
200 கிராம் ரவாவை சிவக்க வறுத்து 50 கிராம் மைதா மீது கொட்டவும். 1 மூடி முற்றிய தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியில் 2 ஏலக்காய் தட்டிப் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு தேங்காயைச் சேர்த்துப் பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும், ரவா, மைதா சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வந்ததும், நெய் தடவிய தட்டில் ஊற்றி மேலே வறுத்த முந்திரி பதிக்கவும். பின்னர் விரும்பும் வடிவில் நறுக்கவும்.
பந்தி 2: மைதா கேக்
3/4 கப் மைதா, 1/4 கப் கடலை மாவு இரண்டையும் நன்கு கலக்கவும். 100 மில்லி பாலில் 2 கப் சீனி சேர்த்துப் பாகு வைக்கவும். சீனி கரைந்ததும் மாவு ஒரு கப் நெய் சேர்த்து கிளறவும், நன்கு பொங்கி பாத்திரத்தில் ஒட்டாது வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே முந்திரி, திராக்ஷையை வறுக்காது சீவி மேலே தூவவும். பின் நறுக்கவும்.
பந்தி 3: சாக்லேட் கேக்
100 கிராம் பால் பவுடர், 20 கிராம் மைதா கலந்து வைக்கவும். 1/4 கிலோ சீனியை ஒரு கப் தண்ணீர் விட்டுக் காய்ச்சி சீனி கரைந்ததும் பால் பவுடர், மைதா, ஒரு கப் நெய்விட்டு நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மறுநாள் வில்லை போடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி கேக் வகைகளை அடிக்கடி செய்து வழங்கினால் சந்தோஷம் கேட்காமலே வீட்டில் நிறையும்.
சமையல் குறிப்பு - 19
அறுசுவை ஜீகல் பந்தி
மழை நாட்களிலும் உடல் நலம் சரியில்லாத போதிலும் இட்லிக்குத் காரசாரமான துவையல், பொடி, சட்னிக்கு நாக்கு ஏங்கும். காரசாரமாக இட்லிக்குக் கூட்டணி அமைப்போமா?
பந்தி 1: 3 இன் 1 இட்லிப் பொடி
10 மிளகாய் வற்றல், பெருங்காயம், 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 ஸ்பூன் கடலைப் பருப்பை சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். சிவக்க வறுத்த தேங்காய்த் துருவம் 4 ஸ்பூன், அல்லது பொட்டுக் கடலை 4 ஸ்பூன் அல்லது வறுத்த எள், 2 ஸ்பூன் சேர்த்துப் பொடித்தால் கூடுதல் தேவை.
பந்தி 2: எலுமிச்சம்பழச் சட்னி
10 மிளகாய் வற்றல், உப்பு, சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.
பந்தி 3: தயிர் சட்னி
5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து 100 மில்லி கெட்டித் தயிரில் கலக்கவும். கடுகு, பெருங்காயம் நைசாக அரிந்த சின்ன வெங்காயம், 20 கிராம் அனைத்தையும் தாளித்து ஆறியபின் தயிரில் சேர்க்கவும்.
பந்தி 4: தேங்காய் பூண்டு துவையல்
5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு சில்லு தேங்காய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கடைசியாக 4 பூண்டு பல் சேர்த்து மசிக்கவும்.
பந்தி 5: பூண்டு பொடி
10 மிளகாய் வற்றலைச் சிவக்க வறுத்து, உப்பு, 10 பூண்டு பல் சேர்த்துப் பொடிக்கவும். பூண்டுக்குப் பதிலாக ஒரு துண்டு பெருங்காயம் பொறித்துச் சேர்க்கலாம்.
முக்கிய குறிப்பு
அம்மியில் மேற்படி ஐட்டங்களைச் செய்ய வேண்டும். மிக்ஸி கூடாது.
சமையல் குறிப்பு - 20
அறுசுவை ஜீகல் பந்தி
வருவது திருமணக் காலம். மணமக்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் வரும் காலம். எனவே வழக்கமான சேமியா, ஜவ்வரிசி பாயசம் தவிர்த்துப் புதுவிதமான பாயசங்கள் செய்வோமா?
பந்தி 1: தேங்காய் பாயசம்
ஒரு மூடி முற்றிய தேங்காயைத் துருவி (கருப்பு இல்லாமல்) 2 ஸ்பூன் பச்சரிசி சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கை விடாமல் காய்ச்சவும். வாசனை வந்ததும் 2 ஏலக்காய், சிறிது குங்குமப்பூ போட்டு 200 கிராம் சீனியைச் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் முந்திரி திராக்ஷா வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். இதைக் கெட்டியாகச் செய்யாமல் கீர் பதத்தில் செய்து கப்பில் வழங்கவும். சீனிக்குப் பதிலாக வெல்லமும் சேர்க்கலாம். 2 ஸ்பூன் வேக வைத்தக் கடலைப் பருப்பு சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: பால் பாயசம்
100 கிராம் (பொன்னி) பச்சரிசியை ரவா பதத்தில் உடைத்து நெய் விட்டு வறுக்கவும். 1 லிட்டர் பாலில் அதை வேக விடவும். நன்கு குழைந்து வெந்ததும் ஏலக்காய், குங்குமப்பூ 1/4 கிலோ சீனி சேர்க்கவும். முந்திரியையும், திராக்ஷையையும் வறுக்காமல் சீவல் மாதிரி சீவி மேலே தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கப்பில் வழங்கவும். மேற்படி முறையில் வறுத்த மாவில் தண்ணீர் விட்டு வேக வைத்து 200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய் வேக வைத்துக் கடலைப்பருப்பு ஒரு பிடி சேர்த்து ஒரு மூடி தேங்காயைப் பால் பிழிந்து சேர்க்கவும்.
பந்தி 3: அவல் பாயசம்
100 கிராம் அவலை ஊற வைத்து நன்கு பிசையவும். 1/2 லிட்டர் தண்ணீரில் வேகவிடவும். 200 கிராம் கல்கண்டு, 2 ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். முந்திரி, திராக்ஷை வறுத்துப் போட்டு 1/2 லிட்டர் பாலைக் காய்ச்சி சாப்பிடும் போது சேர்க்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி பாயசங்களை பாசத்துடன் வழங்கும் போது புது மனத் தம்பதிகளின் வாழ்வும் பாயசமாக இனிக்கும்
சமையல் குறிப்பு - 21
மழை நேரத்தில் எளிய உணவுகளை இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமன வழியாகும். எனவே உணவே மருந்து என்பதற்கு இணங்க ஆரோக்கியமான பொடி வகைகள் செய்வோமா?
பந்தி 1: எள்ளுப் பொடி
100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 10 மிளகாய் வற்றலை வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 2: பருப்புப் பொடி
100 கிராம் து.பருப்பு (அ) பருப்பு 10 மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கடைசியாக ஒரு பூண்டு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 3: தேங்காய்ப் பொடி
ஒரு தேங்காய் முடியைத் (முற்றல்) துருவி சிவக்க வறுக்கவும். 10 மிளகாய் வற்றல், ஒரு பிடி உ.பருப்பு, பெருங்காய், 2 கொத்து கறிவேப்பிலை வறுத்து, உப்பு போட்டு பொடிக்கவும், கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 4: கறிவேப்பிலைப் பொடி
கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 5: கதம்பப் பொடி
து.பருப்பு, கருப்பு உ.பருப்பு, மல்லி தலா 50 கிராம், 10 கிராம் மிளகாய் வற்றல் அனைத்தையும் சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 6: சுண்டைக்காய் வற்றல் பொடி
100 கிராம் சு.வற்றல், 10 மிளகாய் வற்றல், சிறிது சுக்கு, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்தப் பொடி வகைகளைச் சாப்பிடும் பெரிசுகள் எங்கள் சமையல் போல வருமா? என்று பொடி வைத்துப் பேசுவது நின்று விடும்.
சமையல் குறிப்பு - 22
தினமும் ஒரே வித சமையல் தானா? என்று முனகும் குடும்பத்தினரும் 'பஃபே' டைப்பில் விருந்து வைத்து அசத்துவோமா?
பந்தி 1: புளியோதரை
50 கிராம் புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 10 மிளகாய் வற்றல், புளியங்கொட்டை அளவு பெருங்காயம், 2 ஸ்பூன் கடுகு, 4 கொத்துக் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துப் புளிக்கரைச்சலில் கொட்டவும். 5 மிளகாய் வற்றல், 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். கெட்டியாக வந்தபின் 50 கிராம் தோல் நீக்கிய நிலக்கடலை, 50 கிராம் கடலைப் பருப்பு வறுத்துச் சேர்க்கவும். கொட்டைப் பாக்களவு வெல்லம் போட்டு 2 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். 1/2 கிலோ ஐ.ஆர்.20 பச்சரிசியைப் பொல பொல வென்று வடித்து ஆறியபின் நல்லெண்ணெய் விட்டு தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 2: சர்க்கரைப் பொங்கல்
1/4 கிலோ பொன்னி பச்சரிசியை குழைய வேக விடவும் 1/4 கிலோ வெல்லத்தை பாகு வைத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும், ஏலக்காய், குங்குமபூ, வறுத்த முந்தரி, நெய் சேர்த்துக் கிளவும்.
பந்தி 3: ப்ரூட் தயிர் சாதம்
1/4 கிலோ பொன்னி பச்சரிசியைக் குழைய வேக வைக்கவும் காய்ச்சிய பால் 1/4 லிட்டர். 50 மில்லி தயிர். உப்புப் போட்டுக் கிளறவும். ஒரு ஸ்பூன் கடுகு, 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளிக்கவும். 50 கிராம் பச்சைத் திராக்ஷை, 50 கிராம் கருப்புப் திராக்ஷை, மாதுளை முத்துக்கள் கைப்பிடி அளவு மேலே தூவவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி சாத வகைகளுடன் சிப்ஸ், வடை, வடகம், துவையல், ஊறுகாய் சேர்த்துப் பாம்பே டைப்பில் வழங்கும் போது மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் விரிசல் நீங்கும். உற்சாகம் பெருகும்.
சமையல் குறிப்பு - 23
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் குழம்பும், ரசமும் தானா? என்று அலுத்துக் கொள்ளும் குடும்பத்தினரை விதம்விதமாக சமைத்து அசத்துவோமா?
பந்தி 1: பாகற்காய் பிட்ளை
1/4 கிலோ பாகற்காயை நறுக்கி எண்ணெய் விட்டு நன்கு வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். சற்றே வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளியைக் கரைத்து விடவும். ஒரு கப் முற்றியத் தேங்காய்த் துருவல், 2 ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு துண்டு பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைக்கவும். அத்துடன் குழையாது மலர வேக வைத்துத் து.பருப்பு 100 கிராம் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கல்நது வெந்த பாகற்காயில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 50 கி. து.பருப்பு, 50 கி. க.பருப்பு இரண்டையும் ஊற வைத்து ஒரு வற்றல் மிளகாய் சிறிது உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும், சிறிய உருண்டைகயாக உருட்டி எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும் நெய் விட்டு சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷ்டாகவும் உபயோகிக்கலாம். மிதிபாகற்காயாக இருந்தால் கூடுதல் சுவை பலாக்கொட்டையும் சேர்க்கலாம்.
பந்தி 2: கத்தரிக்காய் ரஸவாங்கி
பிஞ்சு கத்தரிக்காயை நீளவாட்டில் நறுக்கி வதக்காமல் மேற்படி முறையில் செய்து மேற்படி முறையில் உபயோகிக்கவும்.
பந்தி 3: மணல் தக்காளி பொரித்த குழம்பு
50 கி. து.பருப்பை வேக வைக்கவும். 50 கி. பூண்டை உரித்து வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி, 2 ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்து வேகவிடவும். பூண்டு வெந்ததும் பயத்தம் பருப்புடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து குழம்பில் கொட்டி 2 ஸ்பூன் மணல் தக்காளி வற்றலைப் பொரித்துக் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். நெய் விட்டு சுடுசோற்றில் கலந்து சாப்பிட சுவை ஆளை அசத்தும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதை சாப்பிட்ட குடும்பத்தினர் குட்டிப் போட்டப் பூனை மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார்கள்.
சமையல் குறிப்பு - 24
அறுசுவை ஜீகல் பந்தி
கூட்டும் பொரியலும் தானா? உப்பு உறைப்பாக எதுவும் செய்யக் கூடாதா என்று புரட்சி செய்கிறார்களா? அந்தப் புரட்சியை ஒடுக்க விதம்விதமாகக் காரக்கறி செய்வோமா?
பந்தி:1 உருளைக்கிழங்கு காரக்கறி
200 கிராம் உ.கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். அத்துடன் 200 கிராம் பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கலக்கவும். 6 மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டு பிசிறி வைக்கவும். கடுகு, உ.பருப்பு, 2 பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கவும். 2 ஸ்பூன் பச்சரிசி மாவைக் கெட்டியாகக் கரைத்து விட்டுக் கிளறி ப.கொத்து மல்லிப் போட்டு இறக்கி வைக்கவும். வேக வைத்தப் பச்சைப் பட்டாணி, அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலைச் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: காராக்கருணை ரோஸ்ட்
காராக் கருணை 200 கிராம் தோல் சீவி கனமான வில்லை போட்டு வேக விடவும். 6 மிளகாய் வற்றல், கொட்டைப் பாக்கு அளவு புளி, உப்பு, 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்துப் பிசிறவும். தோசைக் கல்லில் என்ணெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்வது போல் சிவக்கப் புரட்டி எடுக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் ரோஸ்ட்
ஒரு முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி நீளவாட்டில் நறுக்கவும். 4 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டுப் பிசிறவும். தோசைக் கல்லில் சிறிது தண்ணீர் விட்டு காயை வேக விடவும். சற்றே வெந்ததும் எண்ணெய் விட்டு சிவக்க எடுக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்தக் காரக் கறிகளை விடுமுறை நாட்களில் செய்தால் வீட்டில் சாப்பாடு பற்றிய கார சாரமான விவாதங்கள் குறையும். வீட்டில் இனிமை கூடும்.
சமையல் குறிப்பு - 25
அறுசுவை ஜீகல் பந்தி
விடுமுறை தினங்களில் பெரியவரும், சிறியவரும் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிப்பார்கள். கடையில் வாங்கினால் கட்டுப்படியாகாது. எனவே எளிய முறையில் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் தயாரிப்போமா?
பந்தி:1 ஓலைபக்கோடா
1 கிலோ பச்சரிசி, 1/4 கிலோ துவரம் பருப்பு இரண்டையும் மிஷினில் நைசாக அரைத்து சலிக்கவும், 25 கிராம் மிளகாய் வற்றல், தேவையான அளவு உப்பு, 25 கிராம் உரித்த பூண்டு அனைத்தையும் நைசாக அரைத்து மாவுடன் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் பிழியவும். பூண்டு பிடிக்காதவர்கள் பெருங்காயம் அல்லது இஞ்சி சேர்க்கலாம். கரகர மொறமொற ஓலை பக்கடா ரெடி! ஒரு சங்கடம்! எவ்வளவு செய்தாலும் மிச்சம் வைக்க மாட்டார்கள்!
பந்தி 2: வெங்காய பக்கோடா
200 கிராம் சின்ன வெங்காயம், 5 பச்சை மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நைசாக நறுக்கவும். தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் நெய், இரண்டு சிட்டிகை சோடா உப்பு, 2 ஸ்பூன் ரவா அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு, 100 கிராம் கடலைமாவு, அரிந்த சாமான்கள் அனைத்தையும் சேர்த்து அழுத்தி வெங்காயச்சாறு இறங்கும்படி பிசையவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். பிடித்தால் பிடிபட்டு உதிர்த்தால் புட்டு மாவு போல் உதிர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும். பிசைந்த மாவை சிறுசிறு விள்ளல்களாகத் தட்டில் கிள்ளிப் போட்டு பின்னர் எண்ணெயில் கொட்டிப் பொரிக்கவும். நேரடியாக எண்ணையில் கிள்ளிப் போட்டால் நிறைய உதிர்ந்து கருகும். சிறிது முந்திரி அல்லது நிலக்கடலை சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 3: மிளகு வடை
2 ஸ்பூன் பொரிகடலை, 5 மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைசாக அரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகைத் தட்டிப் போட்டுக் கெட்டியாகக் பிசையவும். ஒரு விரிப்பில் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டவும். சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் இட்டுப் பொரிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இவை அனைத்தும் எளிமையானவை. அதிக செலவு கிடையாது. நாமே தயாரிப்பதால் திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும்.
சமையல் குறிப்பு - 26
அறுசுவை ஜீகல் பந்தி
ரவாவில் உப்புமா, தோசை தவிர வேறு சுவையான உணவுகள் செய்வோமா?
பந்தி 1: ரவாபுட்டு
1/4 கிலோ ரவாவை சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் வைத்து வேக விடவும். 1/4 மணிநேரம் வெந்தபின் சிறிது உப்பு கலந்த நீர் தெளித்து பிசிறி ரவாவை மீண்டும் புட்டுமாவு போல் வேகவிடவும். வெந்தபின் ஒரு கப் தேங்காய்த் துருவல். சிறிது கேசரி பவுடர். 200 கிராம் ஜீனி 4 ஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்துக் கிளறவும். இரண்டு ஏலக்காய் தட்டிப் போடவும். முந்திரி-திராக்ஷை வறுத்துச் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: லெமன் ரவா
1. கடுகு பெருங்காயம் 5 பச்சைமிளகாய் 4 ஸ்பூன் கடலைப் பருப்பு ஒரு கொத்துக் கறிவேப்பிலைத் தாளிக்கவும். இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு உப்பு. சிறிது மஞ்சள் பொடி சேர்த்து ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் ந. எண்ணெய் சிறிது விட்டுக் கிளறவும் தேங்காய்ச் சட்னி சிறந்த கூட்டணி.
2. புளிக்காய்ச்சலை மேற்படி ரவாவில் கிளறலாம். தேங்காய்த் துவையல் கூடுதல் சுவை. இதன் பெயர் ரவாபுளியோதரை.
பந்தி 3: வெஜிடபிள் ரவா
காரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ், உருளை தலா 100 கிராம் ஒரே சீராக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். 200 கிராம் பெல்லாரி 10 பச்சை மிளகாய் நைசாக நறுக்கி இஞ்சி, சிறிது பூண்டு தட்டிப் போட்டு அனைத்தையும் நெய்விட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறி - உப்பு - மஞ்சள்பொடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அனைத்தையும் மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் நன்கு கலக்கவும். வேகவைத்தப் பச்சைப் பட்டாணி - 4 ரஸ்க் துண்டுகள் சேர்த்தால் கூடுதல் சுவை. வெங்காயத் தயிர்பச்சடி சிறந்த கூட்டணி.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
ரவா என்றால் ஓட்டம் பிடித்தவர்கள் ரவா மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.
சமையல் குறிப்பு - 27
அறுசுவை ஜீகல் பந்தி
கோடைக்காலம் வந்து விட்டது. கூடவே விடுமுறையும் வருகிறது. எனவே விருந்தினர் வருகை. வீட்டில் இருக்கும் குழந்தைகளும் விருந்தினரும் சுவைக்கச் சுவையான சத்தான, எளிமையான ஐஸ்கிரீம்கள் தயாரிப்பாமா? அதிகச் செலவு இல்லாததும் கூட.
பந்தி 1: ப்ரூட் சால்ட்
1/2 லிட்டர் கெட்டியான பாலில் ஏலக்காய், குங்குமப்பூ, லெமன் பவுடர் சேர்த்துக் காய்ச்சவும். 100 கிராம் சீனி சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஆற வைக்கவும். ஆப்பிள், மாம்பழம், பைன் ஆப்பிள் தோல் சீவிப் பொடியாக நறுக்கிப் பாலில் சேர்த்துப் ப்ரீசரில் குளிர வைத்து சாப்பிடவும். மேலே நான்கு கருப்புத் திராக்ஷைத் தூவினால் அழகாக இருக்கும்.
பந்தி 2: (ட்ரை) பழச்சாலட்
1/2 லிட்டர் பாலில் நறுக்கிய பேரீட்சை, ப்ளம்ஸ், திராட்சை, செர்ரிப்பழம், குங்குமப்பூ, ஏலக்காய் போட்டுக் காய்ச்சி ஆற வைக்கவும். 100 கிராம் சீனி சேர்த்துப் ப்ரீசரில் குளிர வைக்கவும்.
பந்தி 3: பாயச ஐஸ்கிரிம்
1/2 லிட்டர் பாலில் 4 ஸ்பூன் 'ஓட்சைப் பொடித்துச் சேர்த்து குங்குமப்பூ, ஏலக்காய் போட்டுக் காய்ச்சவும். 100 கிராம் சீனி சேர்த்து ஆற வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் விழுது சிறிது சேர்க்கலாம். பின் ப்ரீசரில் குளிர வைக்கவும். உறைந்ததும் மேலே நைசாக நறுக்கிய முந்திரியைத் தூவிச் சாப்பிடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்த ஐஸ்கிரீம்களைத் தயாரித்து வழங்கினால் வீட்டின் வெம்மை தணிந்து குளர்தென்றல் வீசும். பாராட்டுக் கோடை மழையாய்க் கொட்டும்.
சமையல் குறிப்பு - 28
அறுசுவை ஜீகல் பந்தி
இது மாங்காய் சீசன். மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி. எனவே மாங்காயில் விதவிதமாக ஊறுகாய் செய்வோமா?
பந்தி 1: மாங்காய்த் தொக்கு
1/2 கிலோ ஒட்டு மாங்காயைத் தோல் சீவி சில்லு சில்லாக நறுக்கவும். நறுக்கிய மாங்காயை நல்லெண்ணெய் விட்டுக் குழைய வதக்கவும். பின்னர் சிறிது பெருங்காயம், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள், 25 கிராம் வற்றல் மிளகாய் அனைத்தையும் பொன்னிறமாக வறுத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். பின்னர் 4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடுகு தாளித்து அத்துடன் வதக்கிய மாங்காய், மிளகாய்ப்பொடி எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து புரட்டி எடுக்கவும். ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 2: கார மாங்காய்
1 கிலோ ஒட்டு மாங்காயைத் தோல் சீவிக் கொட்டையுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கழுவித் துடைக்கவும். 50 கிராம் மிளகாய் வற்றல், 2 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் கடுகு அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து வறுக்காது மிக்ஸியில் அரைக்கவும். மாங்காய் மிளகாய்ப் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, கைப்பிடியளவு உப்பு, 25 கிராம் பெருங்காயம் அனைத்தையும் ஜாடியில் போட்டு நன்றாகக் குலுக்கவும். தினமும் வெய்யிலில் வைத்து மூன்றாவது நாள் 100 மில்லி நல்லெண்ணெய் சேர்க்கவும். சிறிது கடுகு தாளித்து உபயோகிக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 3: திடீர் ஊறுகாய்
ஒரு மாங்காயைப் பல் பல்லாக நறுக்கவும், இரண்டு ஸ்பூன் உப்பு, சிறிது மஞ்சள் பொடி, இரண்டு ஸ்பூன் தனி மிளகாய்ப் பொடி, பெருங்காயத் தூள் சிறிது சேர்த்து மாங்காயுடன் பிசிறவும். எண்ணெய் சட்டியில் சிறிது கடுகு தாளித்து மேற்படி மாங்காய் கலவையைச் சேர்த்து புரட்டவும். இரண்டு நாட்கள் வரை கெடாது.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி ஊறுகாய் செய்யும் போது கூடுதலாக சாதம் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வயிறு காயும்.
சமையல் குறிப்பு - 29
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமான அடைகள் செய்வோமா? அடையில் பலவித பருப்புகள் சேர்வதால் கூடுதல் சத்து கிடைக்கும். வெஜிடபிள் சேர்ப்பதால் காய்கறி பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவர். வழக்கமான இட்லி - தோசையில் இருந்து விடுதலையும் கூட.
பந்தி 1: வெங்காய அடை
ஐ.ஆர்.20 புழுங்கல் அரிசி 1/4 கிலோ, து.பருப்பு, க.பருப்பு, காராமணி தலா 50 கிராம், அரிசியைத் தனியே ஊற வைக்கவும், அத்துடன் 10 மிளகாய் வற்றல் 4, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். அத்துடன் ஊற வைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து அரைத்து கடைசியாக பிடி சின்ன வெங்காயம் சேர்த்து ரவா பதத்தில் அரைத்து எடுக்கவும். 100 கிராம் சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சிறிது இஞ்சி, கால் மூடி தேங்காய் அனைத்தையும் நைசாக அரிந்து சேர்த்துத் தேங்காய் எண்ணெய் ஊற்றி முறுகலாகச் சுட்டு எடுக்கவும். கத்தரிக்காய் கொத்சு சிறந்த கூட்டணி.
பந்தி 2: வெஜிடபிள் அடை
மேற்படி முறையில் அரைத்த மாவில் உ.கிழங்கு கேரட், கோஸ், பீட்ரூட் தலா 50 கிராம் 100 கிராம் பெல்லாரி அனைத்தையும் நைசாகத் துருவிச் சேர்த்து ஒரு ஸ்பூன் முழு மிளகு போட்டு வார்த்து எடுக்கவும். அவியல் சேர்ந்தால் மணக்கும்.
பந்தி 3: தேங்காய் அடை
1/4 கிலோ ஊற வைத்தப் புழுங்கல் அரிசி, 5 மி. வற்றல், மிளகாய், உப்பு, பெருங்காயம், 1 முடி தேங்காய் சேர்த்துப் பட்டுப் பட்டாக அரைக்கவும். கடைசியாக 100 கிராம் சி.வெங்காயம் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் தட்டிப் போட்டு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மெல்லிய அடைகளாகச் சுட்டு எடுக்கவும். வெங்காயச் சட்னி செய்தால் அமர்க்களமாய் இருக்கும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்த அடைகளைத் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலும் சாப்பிடலாம். இந்த அடைகளைச் செய்து அசத்தினால்.... அட உங்கள் காட்டில் 'அடை மழையாய் பாராட்டு மழை கொட்டோ கொட்டு' என்று கொட்டும்.
சமையல் குறிப்பு - 30
அறுசுவை ஜீகல் பந்தி
வறுத்து எடுக்கும் வெய்யில் ஆரம்பம் ஆகிவிட்டது. பொரித்து எடுக்க வடகம் தயார் செய்வோமா? எண்ணெய் அதிகம் குடிக்காத வடகம் செய்ய ரெடியா?
பந்தி 1: வெங்காய வடகம்
1/2 கிலோ புழுங்கல் அரிசியை முதல் நாளே கிரைண்டரில் அரைக்கவும். ரேஷன் அரிசியே போதுமானது. 1 லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அரைத்த மாவைக் கரைத்து ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். கூழ் சற்றே கெட்டியானவுடன் 1/4 கிலோ சிறிய வெங்காயம், 50 கிராம் பச்சை மிளகாய் சிறிது கறிவேப்பிலை அரிந்து சேர்த்து உப்பு போட்டுக் கிளறவும். நன்கு வெந்ததும் கோலிக் குண்டு அளவில் கிள்ளி வைத்துக் காய வைக்கவும்.
பந்தி 2: பூசணிக்காய் வடகம்
மேற்படி முறையில் கூழ் தயாரித்து 1/4 கிலோ பூசணிக்காய் 50 கி. பச்சை மிளகாய் கறிவேப்பிலைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கிள்ளி வைக்கவும். கோடைக்கு பூசணிக்காய் மிகவும் குளிர்ச்சியானது.
பந்தி 3: மிளகு வடகம்
மேற்கூறிய வகையில் கூழ் கிளறவும். கூடுதலாக 1 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கிளறவும். பாயசப் பதத்தில் கிளறவும். 50 கி. மிளகை ஒன்றிரண்டாகத் தட்டிச் சேர்க்கவும். ஸ்பூனால் 1 ரூபாய் அளவில் பொட்டுப் பொட்டாக விரிப்பில் ஊற்றிக் காய வைக்கவும். தண்ணீர் போதவில்லை என்றால் கொதிக்க வைத்த வெந்நீரைச் சேர்க்க வேண்டும். தண்ணீர் கூடாது. மிளகு சேர்ப்பதால் எண்ணெய் அலர்ஜி கிடையாது.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இவற்றைத் தயாரித்து மாலை நேர 'ஸ்நாக்காக'வும் தரலாம். குடிசைத் தொழிலாகச் செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். வழக்கமாக ஜவ்வரிசி சேர்ப்பார்கள். அது அதிகம் எண்ணெய் குடிக்கும். எலுமிச்சம்பழம் சேர்த்தால் சிவக்கும். எனவே இந்த தயாரிப்பு சிறப்பாக இருக்கும்.
சமையல் குறிப்பு - 31
அறுசுவை ஜீகல் பந்தி
மரவள்ளிக்கிழங்கு மிகவும் சத்துள்ள உணவு. இதில் புதுவிதமான உணவுகள் செய்வோமா?
பந்தி 1: கிழங்கு பக்கோடா
தோல் நீக்கிச் கட்டையில் துருவிய மரவள்ளிக் கிழங்கு ஒரு கப், நைசாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் காரப் பொடி, ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் அரிந்து போட்டு பெருங்காயத்தூள் அத்துடன் பச்சரிசி மாவு 1/2 கப் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் கொட்டைப் பாக்கு அளவில் மாவைக் கிள்ளிப் போட்டு பொறித்து எடுக்கவும்.
பந்தி 2: கிழங்கு காரஅடை
புழுங்கல் அரிசி 1/4 கிலோவை ஊற வைத்து, 1/4 கிலோ கிழங்கை தோல் சீவித் துருவி, உப்பு, 10 வற்றல் மிளகாய், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். கடைசியாக 100 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கறிவேப்பிலை போட்டு மெல்லிய அடைகளாக சுட்டு எடுக்கவும்.
பந்தி 3: கிழங்கு இனிப்பு அடை
ஊற வைத்தப் புழுங்கல் அரிசி 1/4 கிலோ, துருவிய கிழங்கு 1/4 கிலோ, ஒரு மூடித் தேங்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். கடைசியாக 200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய் சேர்த்து அரைத்து நெய் விட்டு மெல்லிய அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
கிழங்கை அவித்துக் கொடுத்தால் முகம் சுளிக்கும் குடும்பத்தினர் இதனை விரும்பிச் சாப்பிடுவர்; எளிமையான, சுவையான, சத்தான இந்த உணவுகளைச் செய்து அசத்துங்கள். காணும் பொங்கலன்று காணவரும் விருந்தினருக்கு இவற்றை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் முகம் மலர உண்ணும் போது உங்கள் அகம் குளிரும்.
நேயர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
சமையல் குறிப்பு - 32
அறுசுவை ஜீகல் பந்தி
சப்பாத்தி செய்தாலே வீட்டில் புரட்சி வறட்டி மாதிரி இருக்கு என்ற கமெண்ட், பாக்கெட் மாவு வாங்குவோம் என்றால் விலை நமது பாக்கெட்டுக்கு ஒத்து வருவதில்லை சுவையான, மிருதுவான சப்பாத்தி செய்வோமா? வீட்டில் அரைத்த கோதுமை மாவு 3 கப், ஒரு கப் மைதா, இதை நன்றாகக் கலந்து கொள்ளவும். 1/4 லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீனி. 2 ஸ்பூன் நெய் அல்லது டால்டா, தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் மாவைக் கொட்டிப் பிசையவும். ஒரே முறையில் திரட்டும் அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் தான் பிசைவதும் எளிது. சாப்டாகவும் இருக்கும், போதவில்லை எனில் சிறிது தண்ணீரை கையால் தொட்டுத் தொட்டுத் பிசையவும். பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி வைத்து இரண்டு மணி நேரம் கழித்து சப்பாத்தி இடவும். மைதா மாவைத் தொட்டுப் போடவும். கோதுமை மாவு கூடாது. அடுத்து புதிய முறை கூட்டுகள் செய்வோமா?
பந்தி 1: வெஜிடபிள் கூட்டு
கேரட், உருளை, பீன்ஸ் தலா 100 கிராம் நைசாக அறியவும், 200 கி. பெல்லாரி, பச்சை மிளகாய் அரிந்து வதக்கவும். பின்னர் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு உப்பு, சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து, வேக விடவும்.வெந்ததும் 2 ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றி கடுகு, உ.பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடங்கள் இறக்கி வைக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: சன்னா கூட்டு
200 கி. முதல் நாள் ஊற வைத்த வெள்ளை கொண்டைக் கடலையை 1 கேரட்டுடன் வேக விடவும். 200 கி. பெல்லாரி, 5 பச்சை மிளகாய் வதக்கி மேற்கூறிய வகையில் கூட்டு செய்யவும். இறக்கி வைத்ததும் பூண்டு பல் 5, சிறிது இஞ்சி தட்டி போடவும்.
பந்தி 3: தக்காளி கூட்டு
200 கி. தக்காளி, 200 கி. பெல்லாரி, பச்சை மிளகாய் அரிந்து வதக்கி மேற்கூறிய முறையில் கூட்டு செய்யவும்.
அப்புறமென்ன, ஒட்டு மொத்த ஓட்டும் சப்பாத்திக்கே. சமையல் போட்டியில் வெற்றி எப்போதும் உங்களுக்கே.
சமையல் குறிப்பு - 33
அறுசுவை ஜீகல் பந்தி
திடீர் என விருந்தாளி வந்து விட்டால் காபி-டீ-யுடன் என்ன கொறிக்கக் கொடுப்பது என்ற திகைப்பைப் போக்க வழி காண்போமா?
பந்தி 1: வெங்காய பகோடா
1/2 கப் கடலைமாவு, 1/2 கப் அரிசி மாவு இரண்டும் சேர்த்து 100 கிராம் சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையும் கிள்ளிப் போட்டு தேவையான அளவு உப்பு, மேற்படி மாவு ஒரு கப், ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசையவும். உதிர்த்தால் உதிர வேண்டும். உருட்டினால் உருண்டையாகப் பிடிபட வேண்டும். இந்த பதத்தில் பிசைந்து காய்ந்த எண்ணெயில் உதிர்த்து சிவந்ததும் எடுக்கவும். முந்திரி நிலக்கடலை சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: ரிப்பன் பகோடா
மேற்படி மாவில் இரண்டு கப் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் பொடி, சிறிது பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். (கெட்டியாகப் பிசைய வேண்டும்).
பந்தி 3: காரச்சேவு
மேற்படி மாவில் இரண்டு கப் நெய் அல்லது டால்டா இரண்டு ஸ்பூன் தேவையான அளவு உப்பு அத்துடன் இரண்டு ஸ்பூன் மிளகை தட்டிப் போட்டு கரண்டியில் தேய்க்கவும். காரச்சேவு கரண்டி இல்லை என்றால் தேன்குழல் அச்சில் பேப்பரில் பிழிந்து சற்று உலர்ந்ததும் எண்ணெயில் பொறிக்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
சாப்பிட்ட உறவினர் அடிக்கடி படை எடுத்தால் என்ன செய்வது? பல்லை நறநறவென்று கடித்தாலும் படை எடுப்பு நிற்காது. பகோடா சுவையின் முன்னே எந்தக் கோபமும் நிற்காது. பகோடா 'அடிட்' ஆனால் நான் பொறுப்பு இல்லை.
சமையல் குறிப்பு - 34
அறுசுவை ஜீகல் பந்தி
பண்டிகை என்றாலே இனிப்பு உண்டு. அதுவும் முன்பெல்லாம் கண்டிப்பாக பூரண போளி செய்வது உண்டு. பூரண போளி செய்வது சிறிது 'ரிஸ்க்' கான வேலை என்பதால் போளி ஓரம் கட்டப்பட்டு விட்டது. எளிய முறையில் புதுவிதமான போளிகள் செய்வோமா? போலி அல்ல போளி.
பந்தி 1: ஜீரா போளி
நூறு கிராம் மைதா ஒரு சிட்டிகை உப்பு, லெமன் கலர் பவுடர் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து அப்பளம் இட்டுப் பொறிக்கவும். அதிக மொர மொரப்பு இன்றி மிதமான தீயில் பொரிக்கவும். 200 கிராம் ஜீனியுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சிறிது லெமன் கலர் பவுடர் சேர்த்து ஜீரா காய்ச்சவும். பொரித்த போளியை சூடான ஜீராவில் முக்கி இரண்டாக மடித்துத் தட்டில் பரப்பவும். உலர்ந்த தேங்காய்த் துருவல் கடையில் கிடைக்கும். அதை மேலே தூவவும். ஜீராவுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: பால் போளி
மேற்படி முறையில் போளியை பொறித்து ஆற விடவும். 1/2 லிட்டர் பால், குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும். கலர் பவுடரும் 200 கிராம் சீனி சேர்த்து ஆறியபின் போளியை பாலில் நனைத்து இரண்டாக மடித்து தட்டில் பரத்தவும். முந்தரி, திராக்ஷை துருவல் மேலே தூவவும்.
பந்தி 3: சுருள் போளி
50 கிராம் பொட்டுக் கடலை, 100 கிராம் ஜீனி, ஒரு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மேற்படி முறையில் போளியைப் பொரித்து, ஒரு தட்டில் ஜீனியைப் பரப்பி அதன்மேல் பொரித்த போளியை வைத்து, பொட்டுக் கடலை மாவு 2 ஸ்பூன் வைத்து பீடா போல் நன்கு சுருட்டி பிரியாமல் இருக்க ஒரு கிராம்பை சொருகவும். சூடான போளியை ஜீனியில் போட்டதும் இளகும். எளிதாக சுருட்ட வரும். இல்லையென்றால் உடைந்து விடும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
இந்தப் புதுவித போளிகளைச் செய்து உங்களது போலித் தனம் இல்லாத அன்புடன் கலந்து அனைவருக்கும் வழங்குங்கள். தீபாவளி வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்பு - 35
அறுசுவை ஜீகல் பந்தி
கோடைக்காலம் வந்து விட்டது. கூடவே குழந்தைகளுக்கு விடுமுறையும் வந்துவிடும். அடிக்கடி நொறுக்குத் தீனி கேட்டு வேலை நிறுத்தம் செய்யும் சிறிசுகள் - அதற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் பெரிசுகள். எத்தனைதான் கடையில் வாங்கிக் கொடுத்தாலும் வீட்டில் எதுவும் செய்யக்கூடாதா என்ற கண்டனத் தீர்மானங்கள். அப்போது தானே எதிர்க்கட்சியாக நின்று கமெண்ட் அடிக்கலாம் என்ற நப்பாசை, இந்த உள்நாட்டுச் சதியை முறியடிக்க அதிரடியாய் களம் இறங்குவோமா?
பந்தி 1: நெய் பிஸ்கட்
100 கிராம் மைதா, இரண்டு ஸ்பூன் ஜீனி, ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு அனைத்தையும் நன்கு பிசைந்து அப்பளம் இட்டுப் பேப்பரில் ஒரு மணி நேரம் உலர வைத்து வில்லைகளாக நறுக்கி எண்ணெயில் பொறிக்கவும்.
பந்தி 2: மிளகு பிஸ்கட்
100 கிராம் மைதா, அரை ஸ்பூன், அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிசைந்து மேலே கூறிய முறையில் நறுக்கிப் பொறிக்கவும்.
பந்தி 3: இனிப்பு பிஸ்கட்
100 கிராம் மைதாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பிசைந்து மேலே கூறியவாறு நறுக்கியப் பொரிக்கவும். 200 கிராம் ஜீனியை ஒரு ஏலக்காய்த் தட்டிப் போட்டு கம்பி பாகாகக் காய்ச்சி பொரித்த சிப்சை கொட்டிக் கிளறவும்.
குறிப்பு
பிஸ்கட் நறுக்கும்போது சோடா மூடியால் தேய்த்து எடுத்தால் அழகாக இருக்கும். விதம் விதமான கலர் சேர்த்து மாவு பிசைந்தால் நாவுக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் விருந்தாகும்.
ஒரு ரகசியம்
இந்த பிஸ்கட் வகைகளைச் சாப்பிட்ட குடும்பத்தினர் அடிக்கும் ஒட்டு மொத்த கமெண்ட்.
ஒன்ஸ்மோர்
சமையல் குறிப்பு - 36
அறுசுவை ஜீகல் பந்தி
வடை பாயசத்துடன் சாப்பாடு என்பது தமிழக விருந்தின் தனிச்சிறப்பு, வழக்கமான வடைகள் தவிர புதிய வடைகள் பற்றியப் பார்ப்போமா?
பந்தி 1: கோஸ் வடை
200 கிராம் உளுத்தம் பருப்பை ஊற வைத்துத் தோல் போகக் கழுவி இரண்டு வற்றல், மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து பூக்கக் கெட்டியாக அரைக்கவும். 100 கிராம் கோஸ் 25 கிராம் கேரட், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய் 1/4 மூடி, 1 ஸ்பூன் மிளகு. ஒரு கொத்துக் கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டவும். வாசனை ஆளை இழுக்கும். தேங்காய் சட்னி கூடுதல் சுவை.
பந்தி 2: தயிர் வடை
மேற்படி முறையில் உளுந்தை அரைத்து வடையைத் தட்டவும். சூடான வடையை ஒரு டம்ளர் மோரில் முக்கி எடுத்து தட்டில் பரப்பவும். 1/2 லிட்டர் கெட்டித் தயிரில், ஒரு கப் அரிந்த சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய் அரிந்து போட்டு 1 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்புத் தாளித்து நன்கு வதக்கி ஆறியதும் தயிரில் சேர்க்கவும். நன்கு கலந்து வடையின் மீது ஊற்றவும். கேரட் துருவல், பச்சைக் கொத்துமல்லி தூவவும். மேலே ஒரு தக்காளி வில்லை வைத்து அலங்கரிக்கவும். சாப்பிடும்போது சிறிது காராபூந்தி தூவினால் சுவையோ சுவை.
பந்தி 3: தவலை வடை
காராமணி, க.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு தலா ஒரு கப் சேர்த்து ஊற வைக்கவும். தனியே ஒரு கப் புழுங்கல் அரிசி ஊற வைத்து 10 மிளகாய் வற்றல் சேர்த்து ரவா பதத்தில் அரைக்கவும். பின் ஊற வைத்தப் பருப்பு வகைகளைக் கழுவி உப்பு போட்டு ஒன்றாக கொர கொரப்பாக அரைக்கவும். ஒரு முற்றிய தேங்காய் மூடியைப் பல்பல்லாக அறிந்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து இரண்டு ஸ்பூன் மிளகு போட்டு பெரிய பெரிய வடைகள் சுடவும். நடுவில் துணை அவசியம் இட வேண்டும். கெட்டிச் சட்னி சரியான கூட்டணி, சிறிய உருண்டைகளாகப் பொறித்தும் சாப்பிடலாம்.
குறிப்பு
இனி தினம் ஒரு வடை என்று குடும்பத்தினர் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றுவர். பாராட்டுக்கள் அடைமழையாகப் கொட்டும். வாரம் ஒருமுறையேனும் இந்த வடைகள் செய்தால் கூடுதல் புரோட்டின் கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும்.
சமையல் குறிப்பு - 37
அறுசுவை ஜீகல் பந்தி
பொதுவாக ஊட்டச் சத்துக் குறைவினால் தான் பல்வேறு வியாதிகள் வருகின்றன. சமச்சீரான உணவைச் சாப்பிட்டு வந்தாலே பாதி வியாதி வராது. மீறி வரும் வியாதியும் சீக்கிரமே குணமடையும். எளிமையான - புதுமையான - சுவையான - ஊட்டச் சத்து உணவு தயாரிப்போமா?
பந்தி 1: மொச்சை கார சுண்டல்
100 கிராம் மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்கு வேக வைக்கவும். 1/2 ஸ்பூன் தனி மிளகாய் பொடி - மஞ்சள் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து 100 கிராம் பெரிய வெங்காயம் அரிந்து போட்டு நன்கு கலக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்து மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், 1 ஸ்பூன் அரிசி மாவை நாலு ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்து மேற்படி கலவையில் ஊற்றி நன்கு புரட்டவும். தேவைப்பட்டால் கிராம்பு, பூண்டு சேர்க்கலாம்.
பந்தி 2: வெள்ளைக்கடலை சுண்டல்
100 கிராம் வெள்ளைக் கொண்டைக் கடலையை மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 3: பட்டாணி சுண்டல்
100 கிராம் பட்டாணியை மேற்படி முறையில் செய்யவும்.
இதனை மாலை நேரடியாகவும், மதிய உணவிற்கு சைடிஷ்ஷாகவும் தரலாம்.
மெல்லிய தோசை ஊற்றி மேலே மூடவும். புரட்ட வேண்டாம். மேற்படி கலவையை ஒரு கரண்டி நடிவில் வைத்து இரண்டாக மடிக்கவும். புதுமையான மசால் தோசை ரெடி. கெட்டிச் சட்னி சரியான ஜோடி.
குறிப்பு (இல்லத்தரசிகளுக்கு)
'வெறும் சுண்டல் தானா?' என்ற கிண்டல் இனி இல்லை.
சமையல் குறிப்பு - 38
அறுசுவை ஜீகல் பந்தி
தோசை என்றாலே ஹோட்டல் தோசை போல் இல்லை என்று வெறுப்பேற்றுவர் குடும்பத்தினர். அவர்களை 'இது தாண்டா தோசை" என்று 'ஒ' போட வைப்போமா?
1 கிலோ பச்சரிசி (ரேஷன் அரிசியும் பரவாயில்லை) 75 கிராம் வெள்ளை உளுந்து செர்த்து மைதா பதத்தில் மிஷினில் அரைத்து வைக்கவும். இது திடீர் விருந்தாளிகளுக்கு அமுதசுரபி அட்சய பாத்திரம்.
பந்தி 1: மசால் தோசை
ஒரு கப் மேற்படி மாவில் உப்பு போட்டு ஒரு கரண்டி மோர் அல்லது இட்லி மாவில் ஒரு கரண்டி மாவு சேர்த்து இழைகோல மாவு பதத்திற்கு நான்கு மணிநேரம் முன்னதாகக் கரைத்து வைக்கவும்.
100 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். அத்துடன் 200 கிராம் பெல்லாரி நறுக்கி சேர்க்கவும். தேவையான அளவ உப்பு 1/2 ஸ்பூன் காரப்பொடி, 1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து நன்கு பிசிறவும். கடுகு, உ.பருப்பு தாளித்து பிசிறிய கலவையை நன்கு வதக்கவும். வதங்கியதும் 2 ஸ்பூன் பச்சரிசி மாவை 4 ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றி பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு புரட்டவும். மாலா ரெடி. இத்தோசை மாவை கல்லை நன்கு காயவைத்து விசிறவும். ஊற்றியத் தேய்க்கக் கூடாது எண்ணெய் ஊற்றி நன்கு முழுகியதும் புரட்ட வேண்டாம். நடுவில் மாலாவை வைத்து மடிக்கவும்
பந்தி 2: ஆனியன் தோசை
மேற்படி மாவில் நெய்விட்டு தோசை வார்க்கவும். வதக்கிய வெங்காயத்தைப் பாதி தோசையில் நன்கு பரத்தி இரண்டாக மடிக்கவும். இரண்டு புரட்டு புரட்டி எடுக்கவும்.
பந்தி 3: பேப்பர் ரோஸ்ட்
மேற்படி மாவில் 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம் 1 சிட்டிகை பெ.காயம், கறிவேப்பிலை, நைசாக நறுக்கிய முற்றிய தேங்காய்ச் சில் 2 ஸ்பூன் சேர்த்து தோசை வார்க்கவும் நெய் அல்லது டால்டா 2 ஸ்பூன் ஊற்றவும். இரண்டு ஓரத்தையும் நடுவில் சேர்த்து அதை இரண்டாக மடிக்கவும். எல்லாத் தோசைகளுக்கும் தேங்காய் சட்னி சரியான கூட்டணி. கூடுதல் முறுகல் தேவை என்றால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்க்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
தின்ன தின்ன ஆசை, திகட்டாத ஆசை, முறுகல் தோசை மீது முடிந்திடாத ஆசை என்ற நேயர் விருப்பம் என்றென்றும்.
சமையல் குறிப்பு - 39
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் கூட்டும் பொரியலும் தானா, மதியம் ஊசிப் போய் விடுகிறது. ஊசிப் பட்டாசாய் வெடிக்கின்றனரா குடும்பத்தினர். அவர்கள் முகம் மத்தாப்பு பூவாய் மலர இதோ ரோஸ்ட் வகைகள்.
பந்தி 1: பாகற்காய் ரோஸ்ட்
100 கிராம் பாகற்காயை வில்லையாக நறுக்கவும். 1 ஸ்பூன் தனி மிளகாய் பொடி, 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். 1/4 லிட்டர் எண்ணெய் வாணலியில் வைத்து எண்ணெய் காய்ந்ததும், மேற்படி பேஸ்ட்டை பாகற்காயில் பிசிறி எண்ணெயில் உதிர்க்கவும். சிவக்க வறுத்து எடுக்கவும்.
பந்தி 2: வெண்டைக்காய் ரோஸ்ட்
100 கிராம் பிஞ்சு வெண்டைக்காயை கழுவி மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். மேற்படி பேஸ்ட்டில் புரட்டி மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் ரோஸ்ட்
1 வாழைக்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கவும். மேற்படி டேஸ்டில் புரட்டி எண்ணெய் உதிர்த்து சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
பின்குறிப்பு
பேஸ்டை அப்போதைக்கு அப்போது தான் கலக்க வேண்டும். முன் கூட்டி கலந்தால் நீர்த்துப் போய் விடும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
இந்த ரோஸ்ட்டை சாப்பிட்ட உங்களவர் தானே காய்கறி வாங்க ஆரம்பித்து விடுவார். நீங்கள் ஓய்வாக சீரியல் பார்க்கலாம். இந்த ரகசியத்தை உங்கள் தோழிகளுக்கும் தெரியப்படுத்தலாம்.
சமையல் குறிப்பு - 40
அறுசுவை ஜீகல் பந்தி
வருவது கோடைக்காலம். அத்துடன் குழந்தைகளுக்குப் பரீட்சை ஜீரம் வரும்நேரம் இந்த இரண்டு வெம்மையையும் தணிக்கும்படியான குளிச்சியான சத்தான - சுவையான.
பந்தி 1: தேங்காய் பொங்கல்
50 கிராம் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து கால் லிட்டர் பச்சரிசியுடன் சேர்த்து கழுவி 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஆறு விசில் வந்ததும் இறக்கி தேவையான உப்பு, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துவையல் சிறந்த கூட்டணி. வற்றல் வடகம் பொரித்தால் கூடுதல் சுவை. உடல் சூட்டைத் தணிக்கும்.
பந்தி 2: வெந்தயப் பொங்கல்
ஒரு பெரிய பூண்டை உரிக்கவும். கால் லிட்டர் பச்சரிசியுடன் முதல் நாள் ஊற வைத்த இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வைக்கவும். ஆறு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு 1/4 லிட்டர் பாலைக் காய்ச்சி சேர்க்கவும். காரம் போட்ட ஊறுகாய் சரியான பக்க வாத்தியம். உள் உறுப்புகளின் அழற்சியைப் போக்கி மூளையைக் குளிர்ச்சியாக்கும்.
பந்தி 3: காய்கறிப் பொங்கல்
தக்காளி, காரட், பீன்ஸ், கோஸ், உருளை, பீட்ரூட், பெல்லாரி. ஊற வைத்தப் பச்சைப் பட்டாணி தலா 50 கிராம் நாலு பச்சை மிளகாய் கீறி காய்கறியையும் அரிந்து கொள்ளவும். 4 ஸ்பூன் நெய் விட்டு ஒரு பூண்டு சிறிது இஞ்சி, 2 கிராம் ஆகியவற்றைத் தட்டிப் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கடைசியாக காய்கறியைச் சேர்த்துப் புரட்டவும். 1/4 லிட்டர் பச்சரிசி (பொன்னி) கழுவி 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து காய்கறீகள் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்துக் குக்கரில் வைக்கவும். நாலு விசில் வந்ததும் இறக்கி வைத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். தேவைக்கு ஏற்ப நெய் விடலாம். தேவைப்பட்டால் பிரட் சேர்க்கலாம். தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிட சுவையோ சுவை - சத்தோ சத்து.
பெண்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி
மேற்படி பொங்கலைச் செய்தால் வீட்டினரிடையே பொங்கும் கோபம் தணிந்து மகிழ்ச்சி பொங்கும். என்றென்றும் பொங்கலோ பொங்கல் என்ற கோஷம் வீட்டை நிறைக்கும்.
சமையல் குறிப்பு - 41
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் பருப்பு நெய் போட்டு சாப்பிடுவது சுத்த போர் என்று வீட்டில் போர்க் கொடியா? கவலை வேண்டாம். சுவையான, சத்தான துவையல் செய்து அசத்துங்கள்.
பந்தி 1: எள்ளுத் துவையல்
பிடி எள்ளை வறுத்து தோல் நீக்கவும். நான்கு வற்றல் மிளகாய் கொட்டைப்பாக்கு அளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்த எள்ளுடன் நன்கு அரைக்கவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, மோர் சாதம் என அனைத்திற்கும் சிறந்த கூட்டணி. இளைத்தவர் எள்ளைத் திங்கணும் என்பது பழமொழி! குறைந்த செலவில் நிறைந்த பயன். எனவே தான் ஏழைக்குத் தகுந்த வழக்காயிற்று! நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் நிரம்பியது எள் மட்டுமே. எனவே நீத்தார் நினைவு தினங்களில் எள் உபயோகிப்பது மரபாயிற்று!!
பந்தி 2: கொள்ளுத் துவையல்
பிடி கொள்ளை வறுத்து தோல் நீக்கவும். அத்துடன் ஒரு மிளகாய் வற்றல், உப்பு, சிறிது தேங்காய் இரண்டு பூண்டு பல் சேர்த்து நைசாக அரைக்கவும். இதை சாத்தில் கலந்து சாப்பிடலாம். கொழுத்தவன் கொள்ளைத் திங்கணும் என்பது பழமொழி. இது உடலில் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். குறிப்பாக ஊளைச் சதை குறையும். அதிக சக்தி கிடைக்கும். எனவே தான் கொள்ளு குதிரையின் முக்கிய தீவனமாக அமைகிறது.
பந்தி 3 பூண்டு துவையல்
முழு பூண்டை உரித்து வதக்கவும். ஒரு மிளகாய் வற்றலும், பத்து மிளகும் தனியே வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து லேசாக மசிக்கவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். மிளகு அலர்ஜி நிவாரணி. பூண்டு கொலஸ்ட்ரால் நிவாரணி. இரண்டும் சேரும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.
பின்குறிப்பு: இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
மேற்படி துவையல் செய்யும்போது ஒரு கப் அரிசி சேர்த்து வடிக்கவும். இல்லையென்றால் உங்களுக்கு சாதம் மிஞ்சாது.
சமையல் குறிப்பு - 42
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்பது பிரச்சனை. தினமும் பொடியும் - சட்னியும் தானா? சாம்பார் வைத்தால் என்ன என்ற கேள்வி நம்மை வெறுப்பேற்றும் காலை அவசரத்தில் பருப்பு விற்கும் விலையில் காலையில் சாம்பார் சாத்தியமா? என்று காலையிலேயே கலவரம் ஆரம்பித்து விடும். இந்த கலவரத்தை ஒடுக்க சுவையான கொத்சு செய்வோமா?
பந்தி 1: தக்காளி கொத்சு
200 கிராம் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் பிசையவும். அதில் கொட்டைப் பாக்களவு புளியை 1/2 தண்ணீர் விட்டு கரைத்து சேர்க்கவும். கடுகு, பச்சை மிளகாய், அரிந்த சின்ன வெங்காயம் கையளவு, 2 வற்றல் மிளகாய் அனைத்தையும் தக்காளி கரைசலில் தாளித்துக் கொட்டவும். மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வாசனை வரும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் அரிசிமாவு கரைத்து விட்டு கொதித்ததும் இறக்கி வைக்கவும். இது சப்பாத்திக்கும் சுவை கூட்டும்.
பந்தி 2: கத்தரிக்காய் கொத்சு
தக்காளிக்கு பதிலாக 200 கிராம் கத்தரிக்காயை அரிந்து வேகவிட்டு லேசாக மசிக்கவும். மேலே கூறியபடி தாளித்து, புளிக் கரைத்துவிட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் கத்தரிக்காய் விழுதைக் கரைத்து உப்பு போட்டு இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி கொத்துமல்லி கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும். இது அடைக்கு சிறந்த கூட்டணி.
பந்தி 3: உருளைக்கிழங்கு கொத்சு
200 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். மேலே கண்டபடி தாளித்து, புளி கரைத்து விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 ஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து விடவும். கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு வாசனை வந்ததும் இறக்கி வைத்து ஒரு துண்டு இஞ்சி தட்டிப் போடவும். 2 கிராம்பு, 2 ஸ்பூன் கடலைப்பருப்பை நெய் விட்டு தாளித்துச் சேர்க்கவும்.
பின்குறிப்பு இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
மேற்படி கொத்சு வைத்தால் இட்லி, தோசைக்கு மீளா அடிமை ஆகிவிடுவார்கள் குடும்பத்தினர். தினம் கிரைண்டர் போடுவதால் கரண்ட் பில் ஷாக் அடிக்கும்.
சமையல் குறிப்பு - 43
அறுசுவை ஜீகல் பந்தி
சமையல் செய்வது என்பது ஒரு ரசமான அநுபவம். சாப்பிடுபவர்கள் ரசனை மிகுந்தவர்கள் ஆனால் சமைப்பவரின் திறன்கூடும். சாப்பாடு ரசனையாக அமைந்தால் வாழ்வே ரசிக்கும். இப்போது சுவையான உடல்நலத்திற்கு உகந்த ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
பந்தி 1 வேப்பம் பூ ரசம்
எலுமிச்சம்பழ அளவு புளியை அரை லிட்டர் அரிசி கழுவிய நீரில் கரைத்து வடிகட்டி தேவையான உப்பு சேர்க்கவும். ஆறு மிளகாய் வற்றல் - சிறிது பெருங்காயம், கடுகு, வெந்தயம், து.பருப்பு, வேப்பம் பூ தலா 1 ஸ்பூன் சேர்த்து தாளித்து கொதிக்க விடவும். கறிவேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும். இது பித்த நிவாரிணி, ஜீர நிவாரணி, பசியும், ருசியும் ஏற்படும்.
பந்தி 2: விளாம்பழ ரசம்
மிளகு, சீரகம், தலா 1 ஸ்பூன் ஐந்து மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கொட்டைப் பாக்களவு புளியை 1/4 லிட்டர் அரிசி கழுவிய நீரில் கரைத்து மேற்படி பொடியைச் சேர்த்து சிறிது விளாம்பழ ஓட்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின் பருப்பு ஜலம் சேர்த்து கடுகு தாளிக்கவும். இது பசியைத் தூண்டும் ஜீரணம் எளிதில் ஆகும்.
பந்தி 3: எலுமிச்சை ரசம்
பெரிய தக்காளி 1, பச்சை மிளகாய் 4, வற்றல் மிளகாய் 2, நெய் விட்டு வதக்கவும். அத்துடன் சீரகம், மிளகு தட்டி சேர்த்து 1/2 லிட்டர் அரிசி கழுவிய நீரில் கொட்டவும். உப்பு, மஞ்சள்பொடி போட்டு கொதிக்க விடவும் கறிவேப்பிலை பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கி வைக்கவும். பருப்பு ஜலம் சேர்த்து ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழியவும். நெய் விட்டு மிளகு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். வாரம் ஒரு நாள் புளி சேர்க்காது சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
பின்குறிப்பு: மனைவிகளுக்கு ஒரு எச்சரிக்கை
இந்த ரசத்தை ரசித்து சாப்பிடும் குடும்பத்தினர் உங்களுக்கு ரசிகர் மன்றமே அமைத்திடுவர். அப்புறம் என்ன? (குடும்ப) ஆட்சி உங்கள் கையில். தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
சமையல் குறிப்பு - 44
அறுசுவை ஜீகல் பந்தி
ஊறுகாய்
இதனைச் சொல்லும்போதே நாவில் ஊறும் நீர், குழம்பு, ரசம் செய்யாவிட்டாலும் அவசரத்திற்கு ஆபத்பாந்தனாய் உதவுவது ஊறுகாய். இதைச் செய்யத் திணறும் இளைய தலைமுறையினர் ரெடிமேட் ஊறுகாயை நாடுகின்றனர். இதன் விலை கேட்டதும் நாவில் நீர் ஊறாமல் உலர்ந்து விடுகிறது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான ஊறுகாய் தயாரிப்போமா?
முதலில் 50 கிராம் மிளகாய் வற்றல், 25 கிராம் வெந்தயம் இரண்டையும் வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்யவும். வறுக்க வேண்டாம். அத்துடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள்பொடி கலந்து வைக்கவும்.
பந்தி 1: பூண்டு ஊறுக்காய்
100 கிராம் பூண்டை உரித்து இட்லி தட்டில் ஆவியில் வேக விடவும். வெந்ததும் மேற்படி காரபொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து கடுகு தாளித்து ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும். இது கொலஸ்ட்ரால் நிவாரணி.
பந்தி 2: நெல்லிக்காய் ஊறுகாய்
1/2 படி நெல்லிக்காயும், தேவையான அளவு உப்பு, காரப்பொடி சேர்க்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு நெல்லிக்காயில் இரண்டு ஆப்பிளின் சத்து உள்ளது.
பந்தி 3: எலுமிச்சங்காய் ஊறுகாய்
சீசனில் அதிகம் எலுமிச்சம்பழம் வாங்கி கழுவித் துடைத்து நான்காகக் கீறி உப்பு வைக்கவும். தினமும் குலுக்கி வெயிலில் வைக்கவும். ஒரு வாரத்தில் தண்ணீர் சுண்டி 'குலோப்ஜாமூன்' பதத்திற்கு வந்துவிடும். எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டிப் போகாது. இதனை அப்படியேயும் உபயோகிக்கலாம். மேற்படி காரப்பொடி சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்தும் உபயோகிக்கலாம். இதில் வைட்டமின் 'சி' உள்ளது. பித்த நிவாரணி.
பின்குறிப்பு: இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
ஊறுகாய் இன்றி இனி உணவு உண்ணோம் என உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவர், ஊறுகாய் ரசிகர்கள் ஆன உங்கள் குடும்பத்தினர்.
சமையல் குறிப்பு - 45
அறுசுவை ஜீகல் பந்தி
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் அலுவலக விருந்தில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் சூப்பின் பெருமையை விலாவாரியாக விளக்குவார்கள் குடும்பத் தலைவர்கள். அதைச் சிறிசுகல் ஆசைப்படும். அந்த ஆசையை நிறைவேற்றினால் கணிசமான செலவு ஏற்படும். பில்லைப் பார்த்ததும் பல்லைக் கடிப்போம். சூப்பின் சுவையே நமக்கும் மறந்து போகும். குறைந்த செலவில் நிறைந்த சத்து மிகுந்த சுவையான சூப் தயாரிப்போமா?
பந்தி 1: ஊட்டச்சத்து பானம்
சுத்தம் செய்த முருங்கைக்கீரை கைப்பிடி அளவு; அரிந்த சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு;
இவை இரண்டையும் 1/4 லிட்டர் அரிசி கழுவிய கழுநீரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் சீரகம் நசுக்கி
பழைய சினிமா பாடல்களைக் கேட்டால் பாய்ந்து ரேடியோவை மூடும் இளைஞர் கூட்டம். தற்போது பழைய பாடல்களை புதிய உத்தியில் கேட்டால் ரசிக்கிறார்கள். இதனையே கர்நாடக இசையில் ஜீகல் பந்தி என அழைக்கிறார்கள். அதாவது பாரம்பரிய பாணி அல்லாது புதிய இசைக் கருவிகளை இணைத்து இசைப்பது. இதற்கு ஆரம்ப காலத்தில் பயங்கர எதிர்ப்பு. தற்போது ஜீகல் பந்தி மட்டுமே ரசிக்கும் ரசிகர் கூட்டம் வலையப்பட்டி+ யு.சீனாவாஸ் - குன்னக்குடி + வலையப்பட்டி என புதிய கூட்டணிகள்.
அதேபோன்று வழக்கம் அல்லாத புதிய கூட்டணியில் செய்யும் புதிய சமையலும் இளைஞரிடம் வரவேற்பு இருக்கும். உதாரணம் பாஸட் புஃட். இதனை நாமே ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற சிந்தனையின் விளைவுதான் இந்த தேடல் அதற்கு அறுசுவை (ஜீகல்) பந்தி எனப் பெயர் வைக்கலாமா?
பந்தி 1
கலர்புஃல் கீரை
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்யும் போது கீரை வெந்ததும் சிறிது கேரட்டைத் துருவி சேர்க்கவும். கடைசியாக தேங்காய் சேர்க்கவும். கலர் புஃல் கீரை ரெடி இந்தியா 2005 என்றும் பெயர் வைக்கலாம். ஆரஞ்சு, வெண்மை, பச்சை என அசத்தலான சத்தான சுவையான சைட் டிஷ் ரெடி.
பந்தி 2
மேற்படி கீரை 1/2 கப், பொலபொலப்பாக வதக்கவும். 1 கப் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறினால் சுவையான மதிய லஞ் ரெடி. பொரித்த வடகம் சூப்பர் காம்பினேஷன்
பந்தி 3
மேற்படி கீரையை பூரணமாக வைத்து மோதகம் செய்தால் கொலஸ்ட்ராலுக்கு குப்பை. மோதகம் செய்ய வராது என்பவர்கள், மோதகமாவில் கீரையைப் பிசைஞ்சு பிடி கொழுக்கட்டையாக செய்யலாம்.
பந்தி 4
மேற்படி கீரையில் சமோசா செய்யலாம். சமோசா மாவில் சிறிது காரப்பொடி சேர்த்தால் சுவையோ சுவை.
பின்குறிப்பு
சுவையில் வீட்டினரும், பாராட்டி, நீங்களும் பூரி (பெரு)த்துப் போனால் நான் பொறுப்பு அல்ல.
சமையல் குறிப்பு : 2
அறுசுவை ஜீகல் பந்தி
இன்றைய நவீன உலகில் ஊட்டச்சத்துபானம் அன்றாடத் தேவையும், அத்தியாவசியத் தேவையும் ஆகிவிட்டது. விலையும் மாதந்தோறும் உயர்கிறது. நமது பட்ஜெட்டும் உயர்கிறது. எனவே பட்ஜெட்டில் துண்டு மட்டுமல்ல வேட்டியே விழுகிறது. அப்படியும் போதுமான ஊட்டம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. விலையின் அதிர்ச்சியில் உள்ள ஊட்டமும் குறைகிறது. இப்போது குறைந்த செலவில் நிறைந்த ஊட்டம் மிகுந்த பானம் தயாரிப்போமா?
பந்தி 1
ஊட்டச்சத்து பானம்
அரை லிட்டர் பால், 100 கிராம் கேரட், 2 ஏலக்காய் முடிந்தால் முந்தரி 4, குங்குமப்பூ சிறிது (அல்லது) தேங்காய் துருவல் 2 ஸ்பூன் தேவையான அளவு சீனி
கேரட்டை வேக வைத்து தோலை உரித்துப் பிசையவும். அத்துடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அடித்த விழுதை பாலில் சேர்த்துக் காய்ச்சி சீனி சேர்க்கவும். சூடாகவோ, குளிர வைத்தோ பருகவும்.
பந்தி 2
மேற்படி கலவையில் கேரட்டிற்குப் பதிலாக பீட்ரூட் சேர்த்து மேற்படி முறையிலேயே பருகலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். திடீரென கெஸ்ட் வந்து விட்டால் ஐஸ்கட்டி சேர்த்து உடன் கொடுக்கலாம். சாப்பிட்ட கெஸ்ட் அடிக்கடி உங்கள் வீட்டிற்குப் படை எடுப்பார்கள். ஜாக்கிரதை.
பந்தி 3
ரோஜாப்பூவை உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும். பூக்கடையில் ரோஜாப் பூக்கள் மலிவாகக் கிடைக்கும். கோவில்களில் சுவாமியின் நிர்மால்யம் கிடைத்தால் மிகவும் விசேஷம். காய்ச்சிய பாலில் அரைச் சிட்டிகை ரோஜா இதழ்ப்பொடி, 1 ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்துப் பருகினால் சுவையோ சுவை. சத்தோ சத்து.
பின்குறிப்பு
கணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மேற்படி பானங்களை வழங்கி விட்டு நீங்கள் அதன் சுவையில் திளைக்கும்போது ஆடித் தள்ளுபடியில் ஐந்து புடவை உங்கள் மனைவிகள் கேட்டால் பலமாக 'உம்' கொட்டி விடுவீர்கள் சுவை மயக்கத்தில். அதற்கு நான் பொறுப்பு அல்ல.
சமையல் குறிப்பு : 3
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமாகப் போண்டா செய்வோமா?
பந்தி 1:
மைசூர் போண்டா
1/4 கிலோ உளுத்தம் பருப்பை ஊற வைத்துக் கழுவி உப்பு பெருங்காயம் சேர்த்துக் கெட்டியாக பூக்க அரைக்கவும். 2 ஸ்பூன் மிளகு, கறிவேப்பிலை, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் ஒருமுடி, அனைத்தையும் நன்கு கலந்து எண்ணெயில் உருட்டி போட்டு சிவக்க எடுக்கவும்.
பந்தி 2:
உருளைக்கிழங்கு போண்டா
1/4 கிலோ உ.கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து மசிக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உ.பருப்புத் தாளித்து உ.கிழங்கை உப்பு சேர்த்துக் கிளறி சிறு உருண்டையாக உருட்டவும். 100 கிராம் கடலை மாவு, 50 கிராம் பச்சரிசி மாவு, உப்பு தேவையான அளவு, காரப்பொடி 2 ஸ்பூன், சோடா உப்பு 2 சிட்டிகை சேர்த்து தோசை மாவு பதத்தில் கெட்டியாகக் கரைக்கவும். உருண்டையை மேற்படி மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
பந்தி 3:
வெஜிடபிள் போண்டா
கோஸ், காரட் 50 கிராம், வெங்காயம் 100 கிராம், பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலை 2 கொத்து, அனைத்தையும் நைசாக நறுக்கவும், அத்துடன் 100 கிராம் கடலை மாவு, 50 கிராம் பச்சரிசி மாவு, உப்பு சிறிது காரப்பொடி, சோடா உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து எலுமிச்சம்பழ சைசில் உருட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி போண்டா வகைகளை தேங்காய் சட்னியில் தோய்த்து சாப்பிட சுவையோ சுவை. கோடை விடுமுறையில் வரும் விருந்தினர்களை போண்டா செய்து அசத்தலாம்.
சமையல் குறிப்பு: 4
அறுசுவை ஜீகல் பந்தி
இப்போது தேங்காய் சீசன். எனவே தேங்காயில் இனிப்புகள் செய்து அசத்தலாம்
பந்தி 1
தேங்காய் அல்வா
ஒரு முற்றியத் தேங்காயைத் துருவி 50 கிராம் பச்சரிசி சேர்த்து நைசாக அரைக்கவும். 1/2 கிலோ வெல்லத்தில் 1/2 டம்பளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சயும். கம்பி பதம் வந்ததும் அரைத்தத் தேங்காயைச் சேர்த்து அல்வா பதம் வரும்வரை நன்கு கிளறவும். சிறிது ஏலக்காய்த் தூள், 4 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி வைக்கவும்.
பந்தி 2
தேங்காய் பர்பி
ஒரு நெற்றுத் தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியைக் கம்பி பாகு வைத்து அதி வறுத்தத் தேங்காயைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். மைசூர்பாகு பதம் போல் பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியபின் வில்லை போடவும். மேலே முந்திரி, திராக்ஷை தூவி, கலர் பவுடர் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 3
பால் பர்பி
ஒரு முற்றியத் தேங்காயை கறுப்பு விழாமல் துருவவும். 1/2 லிட்டர் பால், 1/2 கிலோ சீனி, ஏலக்காய்தூள், தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பால்கோவா பதத்தில் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் ஊற்றி வில்லை போடவும். முந்திரி, திராக்ஷை மேலே தூவவும். "எல்லோ" பவுடர் சிறிது சேர்க்கலாம்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி இனிப்புகள் எளிமையாகச் செய்யக்கூடியவை. பதம் தவறி வரும் என்ற பயம் இல்லா இனிப்புகள். வளரும் குழந்தைகளுக்குக் குறைந்த செலவில் நிறைந்த ஊட்டம் தரும் இனிப்புகள்.
சமையல் குறிப்பு: 5
அறுசுவை ஜீகல் பந்தி
லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆராஅமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)
பந்தி 1
பாகு இடியாப்பம்
200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளவும்.
பந்தி 2
ஜீனி இடியாப்பம்
100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.
பந்தி 3
பருப்பு இடியாப்பம்
100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.
பந்தி 4
உப்புமா இடியாப்பம்
கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.
இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.
சமையல் குறிப்பு: 6
அறுசுவை ஜீகல் பந்தி
சுவையான பஜ்ஜி வகைகள் செய்வோமா?
பந்தி 1
\
கடலை மாவு பஜ்ஜி
100 கிராம் கடலை மாவு 50 கிராம் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, இரண்டு சிட்கை சோடா உப்பு ஒன்றாகக் கலக்கவும். 5 மிளகாய் வற்றல் பெருங்காயம் - உப்பு சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாழைக்காய் - உருளைக்கிழங்கு - கத்தரிக்காய் - வெங்காயம் சிலைசுகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
பந்தி 2
கோதுமை மாவு பஜ்ஜி
கடலை மாவு அலர்ஜி உள்ளவர்கள் அதற்கு பதிலாக கோதுமை மாவில் மேற்படி முறையில் பஜ்ஜி செய்யவும்.
பந்தி 3
கதம்ப பஜ்ஜி
வாழைக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய்கீற்று, முட்டைக்கோஸ், கேரட், கத்தரிக்காய் அனைத்தையும் நீளவாட்டில் நைசாக நறுக்கி மேற்படி மாவில் பிசிறி எண்ணெயில் தூவி சிவக்கப் பொரித்து எடுக்கவும். ஒவ்வொரு ஈடு பொரிக்கும் போதும் தனித்தனியே காய்கறி கலக்கவும். மொத்தமாகக் கலந்தால் மாவு நீர்த்துப் போய் விடும்.
சட்னி
அரை மூடித் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். (புளி, மிளகாய் வேண்டாம்). கடுகு, வெங்காயம், உ.பருப்பு, கறிவேப்பிலைத் தாளிக்கவும். இது ஈசியாகச் செய்யும் எளிமையான டிபன். மைதா கலப்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காது. எனவே பயமின்றி 'கொலஸ்ட்ரால்' உள்ளவர்களும் அடிக்கடி சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு: 7
அறுசுவை ஜீகல் பந்தி
வாழைத்தண்டு! இது மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இதை அதிகம் சமைப்பது இல்லை. இதில் விதவிதமாக ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1
வாழைத்தண்டு பச்சடி
நைசாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், 2 பச்சை மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளி கரைத்துவிட்டு 50 கிராம் வெல்லம் சேர்க்கவும். பின்னர் அரை மூடி தேங்காய் அரைத்து அத்துடன் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் கடுகு உ.பருப்பு தாளிக்கவும்.
பந்தி 2
வாழைத்தண்டு மோர்க் கூட்டு
நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் அரைமூடி தேங்காய் அரைத்து சிறிது பச்சரிசி மாவு சேர்த்து இரண்டு பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம், தனியா தட்டிப் போட்டு நன்கு கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். ஆறியபின் 100 மில்லி தயிர் சேர்க்கவும்.
பந்தி 3
வாழைத்தண்டு துவட்டல்
2 ஸ்பூன் பயத்தம் பருப்பை ஊறவைக்கவும். இரண்டு வற்றல், மிளகாய், கடுகு, உ.பருப்பு தாளித்து நறுக்கிய வாழைத் தண்டைப் பிசைந்து சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி, ஊறிய ப.பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி எடுக்கவும். முன்னதாகப் பிசைந்து வைத்தால் தண்ணீர் வடிந்து சத்து வெளியேறிவிடும். சாம்பாரிலும் வாழைத்தண்டைப் போடலாம்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு மருத்துவ குணம் கொண்டது. இதன் சாறைத் தொடர்ந்து பருகிவர சிறுநீரகக்கல் கரையும். எனவே வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவது நலம்.
சமையல் குறிப்பு - 8
அறுசுவை ஜீகல் பந்தி
குடும்பத்தினர் மனம் மகிழும் வண்ணம் மகிழம்பூ முறுக்கு செய்வோமா?
பந்தி 1
முள்ளு முறுக்கு - மகிழம்பூ முறுக்கு
ஒருபடி பச்சரிசியை கழுவி ஊற வைத்து உலர்த்தி மிக்ஸியில் இடித்து நைசாக சலித்து ஆவி வரும் வரை வறுக்கவும். அத்துடன் சிவக்க வறுத்து அரைத்த பயத்தம் மாவு 150 கி கலக்கவும். ஒரு முற்றிய தேங்காயைத் துருவி 1/2 லிட்டர் பால் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன் உப்பு, 4 ஸ்பூன் எள், சிறிது ஏலக்காய், 200 கி. சீனி சேர்த்து கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் மாவில் ஊற்றிப் பிசைந்து மகிழம்பூ அச்சில் பிழிந்து பிஸ்கட் நிறம் வந்ததும் எடுக்கவும். சூடு ஆறிய பின்னர்தான் மொரமொரப்பு வரும்.
பந்தி 2
சீப்பு முறுக்கு
மேற்படி மாவை சீப்பு முறுக்குக் கட்டையில் எண்ணெய் தடவி மெல்லிய வட்டமாய்த் தட்டவும். 2 முனையையும் குழாய் போல் ஒட்டி 1/2 மணி நேரம் உலர விடவும். பின்னர் பொரிக்கவும். கொய்யா இலையின் பின்புறத்தில் எண்ணெய் தடவி மேற்படி முறையில் செய்யலாம்.
பந்தி 3
இனிப்பு பிஸ்கட்
மேற்படி, மாவில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா நறுக்கி சேர்த்துப் பிசைந்து சுத்தமான துணியில் வட்டமாகத் தட்டி உலர்ந்த பின் பொரித்து விடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி ஐட்டங்களை அடிக்கடி செய்து அசத்தினால் குடும்பத்தினர் மனம் மகிழும். வீட்டில் அமைதி கொஞ்சும்.
சமையல் குறிப்பு - 9
அறுசுவை ஜீகல் பந்தி
செட்டி நாட்டுப் பலகாரமான மனோலம் செய்வோமா? மற்றும் அப்பம் செய்வோமா?
பந்தி 1
மனோலம்
1/2 கிலோ பச்சரிசி 50 கிராம் ப.பருப்பு சேர்த்து மிஷினில் நைசாக அரைக்கவும். அரைத்த மாவை இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து. பூந்தியாக தீத்தவும். நன்கு மொறு மொறு என்று காராபூந்தி பதத்தில் அரித்து எடுத்து பேப்பரில் கொட்டவும்... அதிக எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும்.
பின்னர் ஒரு தேங்காயை பல் பல்லாக அரிந்து சிவக்க வறுக்கவும். 100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 1/2 கிலோ வெல்லத்துடன் வறுத்த தேங்காய் 2 ஏலக்காய் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கம்பிப் பாகு வைக்கவும். பாகில் வறுத்த எள், 1/4 கிலோ பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்த காராபூந்தியைக் கொட்டிக் கிளறவும். கார்த்திகைக்கு அவல் கிளறுவது போல கரகர மொர மொர சுவையும் இனிப்பும் கலந்த வித்தியாசமான இனிப்பு இது. இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 2
அப்பளம்
பச்சரிசி 100 கிராம், புழுங்கல் அரிசி 100 கிராம், து. பருப்பு 20 கிராம், ஒரு மூடி தேங்காய், 2 ஏலக்காய் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் காய்ந்த எண்ணெயில் ஒரு கரண்டி எடுத்து விடவும். மேலே முறுகலாக வந்ததும் எடுத்து விடவும். ஒன்று ஒன்றாகத் தான் ஊற்ற வேண்டும். சற்றே எண்ணை குடிக்கும். எண்ணெய் வேண்டாதவர்கள் குழிப்பணியார சட்டியில் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு
இவை இரண்டும் நகரத்தார் வீடுகளில் சிறப்பு மிக்க ஐட்டங்கள்.
சமையல் குறிப்பு - 10
அறுசுவை ஜீகல் பந்தி
சத்து நிறைந்த சூப் தயாரிப்போமா? இதை சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். வயதானவர்கள் இதை காலை நேர உணவாகவே சாப்பிடலாம். இளையவர்கள் சப்பாத்தியும் சூப்பும் சாப்பிடலாம். சப்பாத்தி என்றாலே சிலருக்கு அலர்ஜி. மிருதுவான சப்பாத்தி செய்து அசத்துவோமா? கூடவே எளிமையான சைட்டிஷ்ஷாக டால் (பருப்பு).
பந்தி 1
வெஜிடபிள் சூப்
தக்காளி, கோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தலை 4 ஸ்பூன் துருவல். இரண்டு கொத்து முருங்கைக் கீரை. 50 கிராம் நறுக்கிய வெங்காயம். கீறிய ப. மிளகாய் ஒன்று, 4 ஸ்பூன் ஓட்ஸ், அல்லது சம்பா கோதுமை குருணை, அல்லது அவல் இவை எல்லாவற்றையும் 4 டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைய வேகவிடவும். வெந்ததும் 1/2 ஸ்பூன் மிளகு தட்டிப் போட்டு ஒரு துண்டு இஞ்சி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சாப்பிடவும்.
பந்தி 2
சப்பாத்தி
100 கிராம் கோதுமை மாவு இரண்டு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் ஜீனி, 2 ஸ்பூன் தயிர் அனைத்தையும் சேர்த்து ஒரே முறையில் தண்ணீர் விட்டுத் திரட்டி ஈரத்துணியில் மூடி நான்கு மணிநேரம் கழித்து சப்பாத்தி இட்டு இருப்புச் சட்டியில் போட்டு எடுக்க தோசையை விட மிருதுவான சப்பாத்தி ரெடி.
பந்தி 2
டால்
50 கிராம் பயத்தம் பருப்புபை குழைய வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் மஞ்சள் பொடி, உப்பு, 2 ப. மிளகாய், 50 கிராம் சிறிய வெங்காயம் நறுக்கி கடுகு தாளித்து வதக்கிச் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்து சிறிது ப.அரிசி மாவு கரைத்து விடவும். தேவைப்பட்டால் காரட் துறுவல் சேர்க்கவும்.
சமையல் குறிப்பு - 11
அறுசுவை ஜீகல் பந்தி
வாழைக்காயில் சிப்ஸ், ரோஸ்ட் அல்லாமல் வேறு ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1: வாழைக்காய் பொரியல்
1 முற்றிய வாழைக் காயைத் தோல் சீவி இரண்டாக வகிர்ந்து பிஸ்கட் கனத்தில் நறுக்கிக் கழுவவும். 1/4 லிட்டர் கழுநீரில் 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். கடுகு, உ. பருப்பு, நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் 4 ஸ்பூன், 1 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளித்து வாழைக்காயைச் சேர்த்துப் புரட்டவும். பொலபொலவென்று வேக வைத்தப் பருப்பு ஒரு கப், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
பந்தி 2: வாழைக்காய்ப் பொடிமாஸ்
1 வாழைக்காயை முழுசாகக் குக்கரில் வேக வைக்கவும். தோல் உரித்து சற்றே மசித்து உப்பு சேர்த்துப் பிசிறவும். 50 கிராம் சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நறுக்கி கடுகு, உ. பருப்புடன் தாளித்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வாழைக்காய் பொடியைச் சேர்த்துப் புரட்டவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் கதம்ப அவியல்
வாழைக்காய் ஒன்று, சர்க்கரை வள்ளிக்கிழங்கு 100 கிராம், பறங்கிப்பழக் கீற்று நூறு கிராம் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி 1/2 லிட்டர் கழுநீரில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து. நன்கு வேகவைக்கவும். வெந்ததும் 4 ஸ்பூன் வெல்லத் தூள் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் ஒரு மூடி தேங்காயை அரைத்து கடைசியாக 4 சின்ன வெங்காயம், சிறிது சீரகம் சேர்த்து லேசாகத்தட்டி 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வெந்தகாயில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகு, உ, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
சமையல் குறிப்பு - 12
அறுசுவை ஜீகல் பந்தி
புதுவிதமாக காரக் கறிகள் செய்வோமா?
பந்தி 1: முள்ளங்கி உசிலி
100 கிராம் முள்ளங்கியைக் கழுவி கட்டையில் துருவிக் கொள்ளவும். ஊறவைத்த து.பருப்பு 4 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, உப்பு சேர்த்து அரைத்து முள்ளங்கியில் பிசிறவும். சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும். 100 கிராம் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கடுகு, உ, பருப்பு தாளித்து அனைத்தையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பச்சைக் கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
பந்தி 2: உருளைக்கிழங்கு உசிலி
100 கிராம் உ. கிழங்கைத் தோல் சீவிக் கட்டையில் துருவி கழுவவும். 100 கிராம் பெரிய வெங்காயம் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 3: வாழைக்காய் உசிலி
1 முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி கட்டையில் துருவிக் கொள்ளவும். அத்துடன் 100 கிராம் பெரிய வெங்காயம் நறுக்கிச் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 4: வாழைப்பூ உசிலி
வாழைப்பூவை நறுக்கி அரை வேக்காடு வேக வைக்கவும். வெங்காயம் சேர்க்காது மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 5: கொத்தவரங்காய் உசிலி
100 கிராம் கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி அரை வேக்காட்டில் வேகவைத்து வெங்காயம் சேர்காது செய்யவும்.
பீன்ஸையும் இதேபோல் செய்யலாம்.
பின் குறிப்பு
மேற்படி உசிலிகளை சாதத்தில் எண்ணெய் விட்டுச் சாப்பிலாம். ரசம் சாதம், மோர்க்குழம்பு சாதத்திற்கு சைடிஷ்ஷாகாவும் உபயோகிக்கலாம்.
சமையல் குறிப்பு - 13
அறுசுவை ஜீகல் பந்தி
பாரம்பரிய விருந்தில் பச்சடிக்கு முக்கியப் பங்கு உண்டு. பச்சடி வகைகள் பார்ப்போமா?
பந்தி 1: மாங்காய் பச்சடி
1/4 கிலோ மாங்காயை தோல் சீவி சிலைஸ்களாக செதுக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் பொடி, 4 ப.மிளகாய், செதுக்கிய மாங்காய் அனைத்தையும் 1 டம்ளர் தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். வெந்ததும் 100 கி. வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் 1/2 மூடி தேங்காயை அரைத்து 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். 2 நிமிடம் கொதித்தபின் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும்.
பந்தி 2: தக்காளிப் பச்சடி
1/4 தக்காளிப் பழத்தை மேற்கூறிய வகையில் செய்யவும்.
பந்தி 3: வாழைத்தண்டு பச்சடி
1/4 கிலோ இளம் வாழைத்தண்டை நைசாக நறுக்கி 2 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எலுமிச்சம் பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கிராம் வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் 1/2 மூடி தேங்காய் அரைத்து, 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உ.பருப்பு தாளித்து இறக்கவும்.
பந்தி 4: பூசணிக்காய் பச்சடி
1/4 கிலோ பிஞ்சு பூசணிக்காயை பொடியாக நறுக்கி மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 5: வெண்டைக்காய் பச்சடி
1/4 கிலோ பிஞ்சு வெண்டைக்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும். 4 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எ.பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கி. வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் தேங்காய் அரைத்து ப.மாவு சேர்த்து கரைத்து விட்டுத் தாளிக்கவும்.
சமையல் குறிப்பு - 14
அறுசுவை ஜீகல் பந்தி
உருண்டைக் குழம்பு செய்வது சற்றே 'ரிஸ்க்' ஆன விஷயம். எனவே இதனை இளைய தலைமுறையினர் செய்யத் தயங்குகின்றனர். எளிமையாகச் செய்து பார்ப்போம். இதன் சுவை அதிகம். எனவே அனைவரும் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.
பந்தி 1: உருண்டைக் குழம்பு
து. பருப்பு 100 கிராம், க.பருப்பு 100 கிராம் ஊற வைத்து சிறிது உப்பு, 2 வற்றல் சேர்த்துக் கெட்டியாகவும், நைசாகவும் அரைக்கவும். 200 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் பூண்டு நைசாக நறுக்கிச் சேர்த்து, ஒரு மூடி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி, உருண்டையை உருட்டி வேக விடவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் கழிநீரில் கரைத்து 4 ஸ்பூன் மிளகாய்த் தூள் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு வாசனை வரும் வரை மிதமானத் தீயில் கொதிக்க விடவும். நைசாக அரிந்த சின்ன வெங்காயம் ஒரு கை கறிவேப்பிலை, வெந்தயம் 1 ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், து.பருப்பு 1 ஸ்பூன் தாளித்து, எலுமிச்சம்பழ அளவு தேங்காய் அரைத்து விட்டு நன்கு கொதித்தபின் இறக்கி வைக்கவும். வடகம் தாளித்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: புளிக்குழம்பு
பிஞ்சு கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய். இதில் ஏதோ ஒரு காயுடன் 50 கிராம் பூண்டு வதக்கிச் சேர்த்து மேலே கூறியபடி உருண்டைக்குப் பதிலாக சேர்த்து மேற்படி முறையில் தாளிக்கவும். சுட்ட அப்பளம் அல்லது வத்தல், வடகம், அப்பளம்ப்பூ பொரித்தால் செம கூட்டணி. மேற்படிக் குழம்பு வகைகள் செய்யும்போது சாதம் கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும்.
சமையல் குறிப்பு - 15
அறுசுவை ஜீகல் பந்தி
இது மாங்காய் சீசன். எனவே புளிக்காமல் புதுவிதமான ஐட்டங்கள் செய்வோமா?
பந்தி 1: மாங்காய் பொரித்த குழம்பு
புளிப்பு, நார் இல்லாத மாங்காய் 1/4 கிலோ. இதனை கொட்டையுடன் சிறுசிறு துண்டுகளாக 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு 100 கிராம், ஒரு மூடி தேங்காய் அரைத்த விழுது, 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் தாளிக்கவும். இதை நெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடு டிஷ்ஷாகவும் உபயோகிக்கலாம்.
பந்தி 2: மாங்காய் காரக்குழம்பு
நார், புளிப்பு இல்லாத ஒரு மாங்காயைத் தோல் சீவி சிலைசாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கவும். நன்கு வதங்கியபின் எலுமிச்சை அளவு புளியை கடுகு, வெந்தயம், க.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 1 ஸ்பூன் வெந்தயம், சிறிது மஞ்சள், 4 மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் குழம்பில் சேர்த்து வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும். சுட்ட அப்பளம் சிறந்த கூட்டணி.
பந்தி 3: மாம்பழ ஜாம்
1/4 கிலோ மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் ஓட்டவும். 1/4 கிலோ சீனியில் 2 ஏலக்காய் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சவும். கம்பி பாகு வந்ததும் அரைத்த மாம்பழத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். காய்ச்சி ஆறிய பாலில் கலந்து குளிர வைத்துச் சாப்பிடலாம். பிரட் டோஸ்ட் செய்து நடுவில் இந்த ஜாமை வைத்து சாண்ட்விச்சாகச் சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு - 16
அறுசுவை ஜீகல் பந்தி
தற்போது 'கூல்டிரிங்ஸ்' கடைகளில் கேப்பைக் கூழை 'கூழ்டிரிங்ஸ்' என்ற பெயரில் பானமாக விற்கிறார்கள். நாம் கூழையே டிபனாகக் கொடுத்த அசத்துவோமா?
பந்தி 1: புளிக்கூழ்
1/4 கி. புழுங்கல் அரிசியை ஊற வைத்து நைசாகக் கிரைண்டரில் அரைக்கவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும். 6 மிளகாய் வற்றல் 1 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் க. பருப்பு, 4 ஸ்பூன் நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்த்து உப்பு போடவும். 1 ஸ்பூன் வெந்தயம் 1 துண்டு மஞ்சள் எண்ணெய் விடாது வறுத்துப் பொடித்து போட்டு மாவைக் கைவிடாமல் வதக்கி கூழ் மாதிரி அடுப்பில் ஏற்றிக் கிண்டவும். கெட்டியாக வந்ததும் 4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டுக் கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைக்கவும். பின் தட்டில் ந. எண்ணெய் தடவி அல்வா போல் ஊற்றி மேலேயும் சிறிது நல்லெண்ணெய் விட்டு ஆறியதும் வில்லை போட்டும் சாப்பிடலாம். சூடாக அப்படியேவும் சாப்பிடலாம்.
பந்தி 2: எலுமிச்சைக் கூழ்
மேலே குறிப்பிட்ட வகையில் கூழ் கிளறி புளிக்கு பதிலாக 2 எலுமிச்சம்பழம் பிழிந்து 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 3: மோர்க்கூழ்
மேலே குறிப்பிட்ட வகையில் தண்ணீருக்குப் பதிலாக 3/4 லிட்டர் மோர் சேர்த்துக் கிளறவும். பெருங்காயம் வேண்டாம். ஒரு துண்டு இஞ்சி தட்டிச் சேர்க்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மீசையில் ஒட்டாத இது போன்ற கூழ் வகைகளைச் செய்து கொடுத்து அசத்தினால் வீட்டில் மீசை முறுக்கி புரட்சி செய்வது குறையும். பதிலாக கூழ் வாழ்க என்று மீசை முறுக்கிக் கோஷம் போடுவர் கூலாக!
சமையல் குறிப்பு - 17
அறுசுவை ஜீகல் பந்தி
லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆர அமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)
பந்தி 1: பாகு இடியாப்பம்
200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 2: ஜீனி இடியாப்பம்
100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.
பந்தி 3: பருப்பு இடியாப்பம்
100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு. உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை, மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.
பந்தி 4: உப்புமா இடியாப்பம்
கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.
இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.
சமையல் குறிப்பு - 18
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமாகக் கேக் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். கடையில் பாக்கெட்டைக் கிடைக்கும். எனவே வீட்டிலேயே விதம் விதமாகக் கேக் செய்வோமா?
பந்தி 1: ரவா கேக்
200 கிராம் ரவாவை சிவக்க வறுத்து 50 கிராம் மைதா மீது கொட்டவும். 1 மூடி முற்றிய தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியில் 2 ஏலக்காய் தட்டிப் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு தேங்காயைச் சேர்த்துப் பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும், ரவா, மைதா சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வந்ததும், நெய் தடவிய தட்டில் ஊற்றி மேலே வறுத்த முந்திரி பதிக்கவும். பின்னர் விரும்பும் வடிவில் நறுக்கவும்.
பந்தி 2: மைதா கேக்
3/4 கப் மைதா, 1/4 கப் கடலை மாவு இரண்டையும் நன்கு கலக்கவும். 100 மில்லி பாலில் 2 கப் சீனி சேர்த்துப் பாகு வைக்கவும். சீனி கரைந்ததும் மாவு ஒரு கப் நெய் சேர்த்து கிளறவும், நன்கு பொங்கி பாத்திரத்தில் ஒட்டாது வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே முந்திரி, திராக்ஷையை வறுக்காது சீவி மேலே தூவவும். பின் நறுக்கவும்.
பந்தி 3: சாக்லேட் கேக்
100 கிராம் பால் பவுடர், 20 கிராம் மைதா கலந்து வைக்கவும். 1/4 கிலோ சீனியை ஒரு கப் தண்ணீர் விட்டுக் காய்ச்சி சீனி கரைந்ததும் பால் பவுடர், மைதா, ஒரு கப் நெய்விட்டு நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மறுநாள் வில்லை போடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி கேக் வகைகளை அடிக்கடி செய்து வழங்கினால் சந்தோஷம் கேட்காமலே வீட்டில் நிறையும்.
சமையல் குறிப்பு - 19
அறுசுவை ஜீகல் பந்தி
மழை நாட்களிலும் உடல் நலம் சரியில்லாத போதிலும் இட்லிக்குத் காரசாரமான துவையல், பொடி, சட்னிக்கு நாக்கு ஏங்கும். காரசாரமாக இட்லிக்குக் கூட்டணி அமைப்போமா?
பந்தி 1: 3 இன் 1 இட்லிப் பொடி
10 மிளகாய் வற்றல், பெருங்காயம், 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 ஸ்பூன் கடலைப் பருப்பை சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். சிவக்க வறுத்த தேங்காய்த் துருவம் 4 ஸ்பூன், அல்லது பொட்டுக் கடலை 4 ஸ்பூன் அல்லது வறுத்த எள், 2 ஸ்பூன் சேர்த்துப் பொடித்தால் கூடுதல் தேவை.
பந்தி 2: எலுமிச்சம்பழச் சட்னி
10 மிளகாய் வற்றல், உப்பு, சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.
பந்தி 3: தயிர் சட்னி
5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து 100 மில்லி கெட்டித் தயிரில் கலக்கவும். கடுகு, பெருங்காயம் நைசாக அரிந்த சின்ன வெங்காயம், 20 கிராம் அனைத்தையும் தாளித்து ஆறியபின் தயிரில் சேர்க்கவும்.
பந்தி 4: தேங்காய் பூண்டு துவையல்
5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு சில்லு தேங்காய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கடைசியாக 4 பூண்டு பல் சேர்த்து மசிக்கவும்.
பந்தி 5: பூண்டு பொடி
10 மிளகாய் வற்றலைச் சிவக்க வறுத்து, உப்பு, 10 பூண்டு பல் சேர்த்துப் பொடிக்கவும். பூண்டுக்குப் பதிலாக ஒரு துண்டு பெருங்காயம் பொறித்துச் சேர்க்கலாம்.
முக்கிய குறிப்பு
அம்மியில் மேற்படி ஐட்டங்களைச் செய்ய வேண்டும். மிக்ஸி கூடாது.
சமையல் குறிப்பு - 20
அறுசுவை ஜீகல் பந்தி
வருவது திருமணக் காலம். மணமக்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் வரும் காலம். எனவே வழக்கமான சேமியா, ஜவ்வரிசி பாயசம் தவிர்த்துப் புதுவிதமான பாயசங்கள் செய்வோமா?
பந்தி 1: தேங்காய் பாயசம்
ஒரு மூடி முற்றிய தேங்காயைத் துருவி (கருப்பு இல்லாமல்) 2 ஸ்பூன் பச்சரிசி சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கை விடாமல் காய்ச்சவும். வாசனை வந்ததும் 2 ஏலக்காய், சிறிது குங்குமப்பூ போட்டு 200 கிராம் சீனியைச் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் முந்திரி திராக்ஷா வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். இதைக் கெட்டியாகச் செய்யாமல் கீர் பதத்தில் செய்து கப்பில் வழங்கவும். சீனிக்குப் பதிலாக வெல்லமும் சேர்க்கலாம். 2 ஸ்பூன் வேக வைத்தக் கடலைப் பருப்பு சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: பால் பாயசம்
100 கிராம் (பொன்னி) பச்சரிசியை ரவா பதத்தில் உடைத்து நெய் விட்டு வறுக்கவும். 1 லிட்டர் பாலில் அதை வேக விடவும். நன்கு குழைந்து வெந்ததும் ஏலக்காய், குங்குமப்பூ 1/4 கிலோ சீனி சேர்க்கவும். முந்திரியையும், திராக்ஷையையும் வறுக்காமல் சீவல் மாதிரி சீவி மேலே தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கப்பில் வழங்கவும். மேற்படி முறையில் வறுத்த மாவில் தண்ணீர் விட்டு வேக வைத்து 200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய் வேக வைத்துக் கடலைப்பருப்பு ஒரு பிடி சேர்த்து ஒரு மூடி தேங்காயைப் பால் பிழிந்து சேர்க்கவும்.
பந்தி 3: அவல் பாயசம்
100 கிராம் அவலை ஊற வைத்து நன்கு பிசையவும். 1/2 லிட்டர் தண்ணீரில் வேகவிடவும். 200 கிராம் கல்கண்டு, 2 ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். முந்திரி, திராக்ஷை வறுத்துப் போட்டு 1/2 லிட்டர் பாலைக் காய்ச்சி சாப்பிடும் போது சேர்க்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி பாயசங்களை பாசத்துடன் வழங்கும் போது புது மனத் தம்பதிகளின் வாழ்வும் பாயசமாக இனிக்கும்
சமையல் குறிப்பு - 21
மழை நேரத்தில் எளிய உணவுகளை இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமன வழியாகும். எனவே உணவே மருந்து என்பதற்கு இணங்க ஆரோக்கியமான பொடி வகைகள் செய்வோமா?
பந்தி 1: எள்ளுப் பொடி
100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 10 மிளகாய் வற்றலை வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 2: பருப்புப் பொடி
100 கிராம் து.பருப்பு (அ) பருப்பு 10 மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கடைசியாக ஒரு பூண்டு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 3: தேங்காய்ப் பொடி
ஒரு தேங்காய் முடியைத் (முற்றல்) துருவி சிவக்க வறுக்கவும். 10 மிளகாய் வற்றல், ஒரு பிடி உ.பருப்பு, பெருங்காய், 2 கொத்து கறிவேப்பிலை வறுத்து, உப்பு போட்டு பொடிக்கவும், கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 4: கறிவேப்பிலைப் பொடி
கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 5: கதம்பப் பொடி
து.பருப்பு, கருப்பு உ.பருப்பு, மல்லி தலா 50 கிராம், 10 கிராம் மிளகாய் வற்றல் அனைத்தையும் சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
பந்தி 6: சுண்டைக்காய் வற்றல் பொடி
100 கிராம் சு.வற்றல், 10 மிளகாய் வற்றல், சிறிது சுக்கு, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்தப் பொடி வகைகளைச் சாப்பிடும் பெரிசுகள் எங்கள் சமையல் போல வருமா? என்று பொடி வைத்துப் பேசுவது நின்று விடும்.
சமையல் குறிப்பு - 22
தினமும் ஒரே வித சமையல் தானா? என்று முனகும் குடும்பத்தினரும் 'பஃபே' டைப்பில் விருந்து வைத்து அசத்துவோமா?
பந்தி 1: புளியோதரை
50 கிராம் புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 10 மிளகாய் வற்றல், புளியங்கொட்டை அளவு பெருங்காயம், 2 ஸ்பூன் கடுகு, 4 கொத்துக் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துப் புளிக்கரைச்சலில் கொட்டவும். 5 மிளகாய் வற்றல், 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். கெட்டியாக வந்தபின் 50 கிராம் தோல் நீக்கிய நிலக்கடலை, 50 கிராம் கடலைப் பருப்பு வறுத்துச் சேர்க்கவும். கொட்டைப் பாக்களவு வெல்லம் போட்டு 2 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். 1/2 கிலோ ஐ.ஆர்.20 பச்சரிசியைப் பொல பொல வென்று வடித்து ஆறியபின் நல்லெண்ணெய் விட்டு தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறவும்.
பந்தி 2: சர்க்கரைப் பொங்கல்
1/4 கிலோ பொன்னி பச்சரிசியை குழைய வேக விடவும் 1/4 கிலோ வெல்லத்தை பாகு வைத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும், ஏலக்காய், குங்குமபூ, வறுத்த முந்தரி, நெய் சேர்த்துக் கிளவும்.
பந்தி 3: ப்ரூட் தயிர் சாதம்
1/4 கிலோ பொன்னி பச்சரிசியைக் குழைய வேக வைக்கவும் காய்ச்சிய பால் 1/4 லிட்டர். 50 மில்லி தயிர். உப்புப் போட்டுக் கிளறவும். ஒரு ஸ்பூன் கடுகு, 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளிக்கவும். 50 கிராம் பச்சைத் திராக்ஷை, 50 கிராம் கருப்புப் திராக்ஷை, மாதுளை முத்துக்கள் கைப்பிடி அளவு மேலே தூவவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி சாத வகைகளுடன் சிப்ஸ், வடை, வடகம், துவையல், ஊறுகாய் சேர்த்துப் பாம்பே டைப்பில் வழங்கும் போது மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் விரிசல் நீங்கும். உற்சாகம் பெருகும்.
சமையல் குறிப்பு - 23
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் குழம்பும், ரசமும் தானா? என்று அலுத்துக் கொள்ளும் குடும்பத்தினரை விதம்விதமாக சமைத்து அசத்துவோமா?
பந்தி 1: பாகற்காய் பிட்ளை
1/4 கிலோ பாகற்காயை நறுக்கி எண்ணெய் விட்டு நன்கு வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். சற்றே வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளியைக் கரைத்து விடவும். ஒரு கப் முற்றியத் தேங்காய்த் துருவல், 2 ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு துண்டு பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைக்கவும். அத்துடன் குழையாது மலர வேக வைத்துத் து.பருப்பு 100 கிராம் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கல்நது வெந்த பாகற்காயில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 50 கி. து.பருப்பு, 50 கி. க.பருப்பு இரண்டையும் ஊற வைத்து ஒரு வற்றல் மிளகாய் சிறிது உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும், சிறிய உருண்டைகயாக உருட்டி எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும் நெய் விட்டு சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷ்டாகவும் உபயோகிக்கலாம். மிதிபாகற்காயாக இருந்தால் கூடுதல் சுவை பலாக்கொட்டையும் சேர்க்கலாம்.
பந்தி 2: கத்தரிக்காய் ரஸவாங்கி
பிஞ்சு கத்தரிக்காயை நீளவாட்டில் நறுக்கி வதக்காமல் மேற்படி முறையில் செய்து மேற்படி முறையில் உபயோகிக்கவும்.
பந்தி 3: மணல் தக்காளி பொரித்த குழம்பு
50 கி. து.பருப்பை வேக வைக்கவும். 50 கி. பூண்டை உரித்து வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி, 2 ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்து வேகவிடவும். பூண்டு வெந்ததும் பயத்தம் பருப்புடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து குழம்பில் கொட்டி 2 ஸ்பூன் மணல் தக்காளி வற்றலைப் பொரித்துக் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். நெய் விட்டு சுடுசோற்றில் கலந்து சாப்பிட சுவை ஆளை அசத்தும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இதை சாப்பிட்ட குடும்பத்தினர் குட்டிப் போட்டப் பூனை மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார்கள்.
சமையல் குறிப்பு - 24
அறுசுவை ஜீகல் பந்தி
கூட்டும் பொரியலும் தானா? உப்பு உறைப்பாக எதுவும் செய்யக் கூடாதா என்று புரட்சி செய்கிறார்களா? அந்தப் புரட்சியை ஒடுக்க விதம்விதமாகக் காரக்கறி செய்வோமா?
பந்தி:1 உருளைக்கிழங்கு காரக்கறி
200 கிராம் உ.கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். அத்துடன் 200 கிராம் பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கலக்கவும். 6 மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டு பிசிறி வைக்கவும். கடுகு, உ.பருப்பு, 2 பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கவும். 2 ஸ்பூன் பச்சரிசி மாவைக் கெட்டியாகக் கரைத்து விட்டுக் கிளறி ப.கொத்து மல்லிப் போட்டு இறக்கி வைக்கவும். வேக வைத்தப் பச்சைப் பட்டாணி, அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலைச் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: காராக்கருணை ரோஸ்ட்
காராக் கருணை 200 கிராம் தோல் சீவி கனமான வில்லை போட்டு வேக விடவும். 6 மிளகாய் வற்றல், கொட்டைப் பாக்கு அளவு புளி, உப்பு, 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்துப் பிசிறவும். தோசைக் கல்லில் என்ணெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்வது போல் சிவக்கப் புரட்டி எடுக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் ரோஸ்ட்
ஒரு முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி நீளவாட்டில் நறுக்கவும். 4 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டுப் பிசிறவும். தோசைக் கல்லில் சிறிது தண்ணீர் விட்டு காயை வேக விடவும். சற்றே வெந்ததும் எண்ணெய் விட்டு சிவக்க எடுக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்தக் காரக் கறிகளை விடுமுறை நாட்களில் செய்தால் வீட்டில் சாப்பாடு பற்றிய கார சாரமான விவாதங்கள் குறையும். வீட்டில் இனிமை கூடும்.
சமையல் குறிப்பு - 25
அறுசுவை ஜீகல் பந்தி
விடுமுறை தினங்களில் பெரியவரும், சிறியவரும் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிப்பார்கள். கடையில் வாங்கினால் கட்டுப்படியாகாது. எனவே எளிய முறையில் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் தயாரிப்போமா?
பந்தி:1 ஓலைபக்கோடா
1 கிலோ பச்சரிசி, 1/4 கிலோ துவரம் பருப்பு இரண்டையும் மிஷினில் நைசாக அரைத்து சலிக்கவும், 25 கிராம் மிளகாய் வற்றல், தேவையான அளவு உப்பு, 25 கிராம் உரித்த பூண்டு அனைத்தையும் நைசாக அரைத்து மாவுடன் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் பிழியவும். பூண்டு பிடிக்காதவர்கள் பெருங்காயம் அல்லது இஞ்சி சேர்க்கலாம். கரகர மொறமொற ஓலை பக்கடா ரெடி! ஒரு சங்கடம்! எவ்வளவு செய்தாலும் மிச்சம் வைக்க மாட்டார்கள்!
பந்தி 2: வெங்காய பக்கோடா
200 கிராம் சின்ன வெங்காயம், 5 பச்சை மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நைசாக நறுக்கவும். தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் நெய், இரண்டு சிட்டிகை சோடா உப்பு, 2 ஸ்பூன் ரவா அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு, 100 கிராம் கடலைமாவு, அரிந்த சாமான்கள் அனைத்தையும் சேர்த்து அழுத்தி வெங்காயச்சாறு இறங்கும்படி பிசையவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். பிடித்தால் பிடிபட்டு உதிர்த்தால் புட்டு மாவு போல் உதிர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும். பிசைந்த மாவை சிறுசிறு விள்ளல்களாகத் தட்டில் கிள்ளிப் போட்டு பின்னர் எண்ணெயில் கொட்டிப் பொரிக்கவும். நேரடியாக எண்ணையில் கிள்ளிப் போட்டால் நிறைய உதிர்ந்து கருகும். சிறிது முந்திரி அல்லது நிலக்கடலை சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 3: மிளகு வடை
2 ஸ்பூன் பொரிகடலை, 5 மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைசாக அரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகைத் தட்டிப் போட்டுக் கெட்டியாகக் பிசையவும். ஒரு விரிப்பில் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டவும். சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் இட்டுப் பொரிக்கவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இவை அனைத்தும் எளிமையானவை. அதிக செலவு கிடையாது. நாமே தயாரிப்பதால் திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும்.
சமையல் குறிப்பு - 26
அறுசுவை ஜீகல் பந்தி
ரவாவில் உப்புமா, தோசை தவிர வேறு சுவையான உணவுகள் செய்வோமா?
பந்தி 1: ரவாபுட்டு
1/4 கிலோ ரவாவை சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் வைத்து வேக விடவும். 1/4 மணிநேரம் வெந்தபின் சிறிது உப்பு கலந்த நீர் தெளித்து பிசிறி ரவாவை மீண்டும் புட்டுமாவு போல் வேகவிடவும். வெந்தபின் ஒரு கப் தேங்காய்த் துருவல். சிறிது கேசரி பவுடர். 200 கிராம் ஜீனி 4 ஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்துக் கிளறவும். இரண்டு ஏலக்காய் தட்டிப் போடவும். முந்திரி-திராக்ஷை வறுத்துச் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: லெமன் ரவா
1. கடுகு பெருங்காயம் 5 பச்சைமிளகாய் 4 ஸ்பூன் கடலைப் பருப்பு ஒரு கொத்துக் கறிவேப்பிலைத் தாளிக்கவும். இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு உப்பு. சிறிது மஞ்சள் பொடி சேர்த்து ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் ந. எண்ணெய் சிறிது விட்டுக் கிளறவும் தேங்காய்ச் சட்னி சிறந்த கூட்டணி.
2. புளிக்காய்ச்சலை மேற்படி ரவாவில் கிளறலாம். தேங்காய்த் துவையல் கூடுதல் சுவை. இதன் பெயர் ரவாபுளியோதரை.
பந்தி 3: வெஜிடபிள் ரவா
காரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ், உருளை தலா 100 கிராம் ஒரே சீராக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். 200 கிராம் பெல்லாரி 10 பச்சை மிளகாய் நைசாக நறுக்கி இஞ்சி, சிறிது பூண்டு தட்டிப் போட்டு அனைத்தையும் நெய்விட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறி - உப்பு - மஞ்சள்பொடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அனைத்தையும் மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் நன்கு கலக்கவும். வேகவைத்தப் பச்சைப் பட்டாணி - 4 ரஸ்க் துண்டுகள் சேர்த்தால் கூடுதல் சுவை. வெங்காயத் தயிர்பச்சடி சிறந்த கூட்டணி.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
ரவா என்றால் ஓட்டம் பிடித்தவர்கள் ரவா மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.
சமையல் குறிப்பு - 27
அறுசுவை ஜீகல் பந்தி
கோடைக்காலம் வந்து விட்டது. கூடவே விடுமுறையும் வருகிறது. எனவே விருந்தினர் வருகை. வீட்டில் இருக்கும் குழந்தைகளும் விருந்தினரும் சுவைக்கச் சுவையான சத்தான, எளிமையான ஐஸ்கிரீம்கள் தயாரிப்பாமா? அதிகச் செலவு இல்லாததும் கூட.
பந்தி 1: ப்ரூட் சால்ட்
1/2 லிட்டர் கெட்டியான பாலில் ஏலக்காய், குங்குமப்பூ, லெமன் பவுடர் சேர்த்துக் காய்ச்சவும். 100 கிராம் சீனி சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஆற வைக்கவும். ஆப்பிள், மாம்பழம், பைன் ஆப்பிள் தோல் சீவிப் பொடியாக நறுக்கிப் பாலில் சேர்த்துப் ப்ரீசரில் குளிர வைத்து சாப்பிடவும். மேலே நான்கு கருப்புத் திராக்ஷைத் தூவினால் அழகாக இருக்கும்.
பந்தி 2: (ட்ரை) பழச்சாலட்
1/2 லிட்டர் பாலில் நறுக்கிய பேரீட்சை, ப்ளம்ஸ், திராட்சை, செர்ரிப்பழம், குங்குமப்பூ, ஏலக்காய் போட்டுக் காய்ச்சி ஆற வைக்கவும். 100 கிராம் சீனி சேர்த்துப் ப்ரீசரில் குளிர வைக்கவும்.
பந்தி 3: பாயச ஐஸ்கிரிம்
1/2 லிட்டர் பாலில் 4 ஸ்பூன் 'ஓட்சைப் பொடித்துச் சேர்த்து குங்குமப்பூ, ஏலக்காய் போட்டுக் காய்ச்சவும். 100 கிராம் சீனி சேர்த்து ஆற வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் விழுது சிறிது சேர்க்கலாம். பின் ப்ரீசரில் குளிர வைக்கவும். உறைந்ததும் மேலே நைசாக நறுக்கிய முந்திரியைத் தூவிச் சாப்பிடவும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்த ஐஸ்கிரீம்களைத் தயாரித்து வழங்கினால் வீட்டின் வெம்மை தணிந்து குளர்தென்றல் வீசும். பாராட்டுக் கோடை மழையாய்க் கொட்டும்.
சமையல் குறிப்பு - 28
அறுசுவை ஜீகல் பந்தி
இது மாங்காய் சீசன். மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி. எனவே மாங்காயில் விதவிதமாக ஊறுகாய் செய்வோமா?
பந்தி 1: மாங்காய்த் தொக்கு
1/2 கிலோ ஒட்டு மாங்காயைத் தோல் சீவி சில்லு சில்லாக நறுக்கவும். நறுக்கிய மாங்காயை நல்லெண்ணெய் விட்டுக் குழைய வதக்கவும். பின்னர் சிறிது பெருங்காயம், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள், 25 கிராம் வற்றல் மிளகாய் அனைத்தையும் பொன்னிறமாக வறுத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். பின்னர் 4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடுகு தாளித்து அத்துடன் வதக்கிய மாங்காய், மிளகாய்ப்பொடி எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து புரட்டி எடுக்கவும். ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 2: கார மாங்காய்
1 கிலோ ஒட்டு மாங்காயைத் தோல் சீவிக் கொட்டையுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கழுவித் துடைக்கவும். 50 கிராம் மிளகாய் வற்றல், 2 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் கடுகு அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து வறுக்காது மிக்ஸியில் அரைக்கவும். மாங்காய் மிளகாய்ப் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, கைப்பிடியளவு உப்பு, 25 கிராம் பெருங்காயம் அனைத்தையும் ஜாடியில் போட்டு நன்றாகக் குலுக்கவும். தினமும் வெய்யிலில் வைத்து மூன்றாவது நாள் 100 மில்லி நல்லெண்ணெய் சேர்க்கவும். சிறிது கடுகு தாளித்து உபயோகிக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.
பந்தி 3: திடீர் ஊறுகாய்
ஒரு மாங்காயைப் பல் பல்லாக நறுக்கவும், இரண்டு ஸ்பூன் உப்பு, சிறிது மஞ்சள் பொடி, இரண்டு ஸ்பூன் தனி மிளகாய்ப் பொடி, பெருங்காயத் தூள் சிறிது சேர்த்து மாங்காயுடன் பிசிறவும். எண்ணெய் சட்டியில் சிறிது கடுகு தாளித்து மேற்படி மாங்காய் கலவையைச் சேர்த்து புரட்டவும். இரண்டு நாட்கள் வரை கெடாது.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
மேற்படி ஊறுகாய் செய்யும் போது கூடுதலாக சாதம் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வயிறு காயும்.
சமையல் குறிப்பு - 29
அறுசுவை ஜீகல் பந்தி
விதம் விதமான அடைகள் செய்வோமா? அடையில் பலவித பருப்புகள் சேர்வதால் கூடுதல் சத்து கிடைக்கும். வெஜிடபிள் சேர்ப்பதால் காய்கறி பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவர். வழக்கமான இட்லி - தோசையில் இருந்து விடுதலையும் கூட.
பந்தி 1: வெங்காய அடை
ஐ.ஆர்.20 புழுங்கல் அரிசி 1/4 கிலோ, து.பருப்பு, க.பருப்பு, காராமணி தலா 50 கிராம், அரிசியைத் தனியே ஊற வைக்கவும், அத்துடன் 10 மிளகாய் வற்றல் 4, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். அத்துடன் ஊற வைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து அரைத்து கடைசியாக பிடி சின்ன வெங்காயம் சேர்த்து ரவா பதத்தில் அரைத்து எடுக்கவும். 100 கிராம் சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சிறிது இஞ்சி, கால் மூடி தேங்காய் அனைத்தையும் நைசாக அரிந்து சேர்த்துத் தேங்காய் எண்ணெய் ஊற்றி முறுகலாகச் சுட்டு எடுக்கவும். கத்தரிக்காய் கொத்சு சிறந்த கூட்டணி.
பந்தி 2: வெஜிடபிள் அடை
மேற்படி முறையில் அரைத்த மாவில் உ.கிழங்கு கேரட், கோஸ், பீட்ரூட் தலா 50 கிராம் 100 கிராம் பெல்லாரி அனைத்தையும் நைசாகத் துருவிச் சேர்த்து ஒரு ஸ்பூன் முழு மிளகு போட்டு வார்த்து எடுக்கவும். அவியல் சேர்ந்தால் மணக்கும்.
பந்தி 3: தேங்காய் அடை
1/4 கிலோ ஊற வைத்தப் புழுங்கல் அரிசி, 5 மி. வற்றல், மிளகாய், உப்பு, பெருங்காயம், 1 முடி தேங்காய் சேர்த்துப் பட்டுப் பட்டாக அரைக்கவும். கடைசியாக 100 கிராம் சி.வெங்காயம் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் தட்டிப் போட்டு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மெல்லிய அடைகளாகச் சுட்டு எடுக்கவும். வெங்காயச் சட்னி செய்தால் அமர்க்களமாய் இருக்கும்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இந்த அடைகளைத் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலும் சாப்பிடலாம். இந்த அடைகளைச் செய்து அசத்தினால்.... அட உங்கள் காட்டில் 'அடை மழையாய் பாராட்டு மழை கொட்டோ கொட்டு' என்று கொட்டும்.
சமையல் குறிப்பு - 30
அறுசுவை ஜீகல் பந்தி
வறுத்து எடுக்கும் வெய்யில் ஆரம்பம் ஆகிவிட்டது. பொரித்து எடுக்க வடகம் தயார் செய்வோமா? எண்ணெய் அதிகம் குடிக்காத வடகம் செய்ய ரெடியா?
பந்தி 1: வெங்காய வடகம்
1/2 கிலோ புழுங்கல் அரிசியை முதல் நாளே கிரைண்டரில் அரைக்கவும். ரேஷன் அரிசியே போதுமானது. 1 லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அரைத்த மாவைக் கரைத்து ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். கூழ் சற்றே கெட்டியானவுடன் 1/4 கிலோ சிறிய வெங்காயம், 50 கிராம் பச்சை மிளகாய் சிறிது கறிவேப்பிலை அரிந்து சேர்த்து உப்பு போட்டுக் கிளறவும். நன்கு வெந்ததும் கோலிக் குண்டு அளவில் கிள்ளி வைத்துக் காய வைக்கவும்.
பந்தி 2: பூசணிக்காய் வடகம்
மேற்படி முறையில் கூழ் தயாரித்து 1/4 கிலோ பூசணிக்காய் 50 கி. பச்சை மிளகாய் கறிவேப்பிலைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கிள்ளி வைக்கவும். கோடைக்கு பூசணிக்காய் மிகவும் குளிர்ச்சியானது.
பந்தி 3: மிளகு வடகம்
மேற்கூறிய வகையில் கூழ் கிளறவும். கூடுதலாக 1 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கிளறவும். பாயசப் பதத்தில் கிளறவும். 50 கி. மிளகை ஒன்றிரண்டாகத் தட்டிச் சேர்க்கவும். ஸ்பூனால் 1 ரூபாய் அளவில் பொட்டுப் பொட்டாக விரிப்பில் ஊற்றிக் காய வைக்கவும். தண்ணீர் போதவில்லை என்றால் கொதிக்க வைத்த வெந்நீரைச் சேர்க்க வேண்டும். தண்ணீர் கூடாது. மிளகு சேர்ப்பதால் எண்ணெய் அலர்ஜி கிடையாது.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு
இவற்றைத் தயாரித்து மாலை நேர 'ஸ்நாக்காக'வும் தரலாம். குடிசைத் தொழிலாகச் செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். வழக்கமாக ஜவ்வரிசி சேர்ப்பார்கள். அது அதிகம் எண்ணெய் குடிக்கும். எலுமிச்சம்பழம் சேர்த்தால் சிவக்கும். எனவே இந்த தயாரிப்பு சிறப்பாக இருக்கும்.
சமையல் குறிப்பு - 31
அறுசுவை ஜீகல் பந்தி
மரவள்ளிக்கிழங்கு மிகவும் சத்துள்ள உணவு. இதில் புதுவிதமான உணவுகள் செய்வோமா?
பந்தி 1: கிழங்கு பக்கோடா
தோல் நீக்கிச் கட்டையில் துருவிய மரவள்ளிக் கிழங்கு ஒரு கப், நைசாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் காரப் பொடி, ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் அரிந்து போட்டு பெருங்காயத்தூள் அத்துடன் பச்சரிசி மாவு 1/2 கப் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் கொட்டைப் பாக்கு அளவில் மாவைக் கிள்ளிப் போட்டு பொறித்து எடுக்கவும்.
பந்தி 2: கிழங்கு காரஅடை
புழுங்கல் அரிசி 1/4 கிலோவை ஊற வைத்து, 1/4 கிலோ கிழங்கை தோல் சீவித் துருவி, உப்பு, 10 வற்றல் மிளகாய், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். கடைசியாக 100 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கறிவேப்பிலை போட்டு மெல்லிய அடைகளாக சுட்டு எடுக்கவும்.
பந்தி 3: கிழங்கு இனிப்பு அடை
ஊற வைத்தப் புழுங்கல் அரிசி 1/4 கிலோ, துருவிய கிழங்கு 1/4 கிலோ, ஒரு மூடித் தேங்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். கடைசியாக 200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய் சேர்த்து அரைத்து நெய் விட்டு மெல்லிய அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
கிழங்கை அவித்துக் கொடுத்தால் முகம் சுளிக்கும் குடும்பத்தினர் இதனை விரும்பிச் சாப்பிடுவர்; எளிமையான, சுவையான, சத்தான இந்த உணவுகளைச் செய்து அசத்துங்கள். காணும் பொங்கலன்று காணவரும் விருந்தினருக்கு இவற்றை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் முகம் மலர உண்ணும் போது உங்கள் அகம் குளிரும்.
நேயர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
சமையல் குறிப்பு - 32
அறுசுவை ஜீகல் பந்தி
சப்பாத்தி செய்தாலே வீட்டில் புரட்சி வறட்டி மாதிரி இருக்கு என்ற கமெண்ட், பாக்கெட் மாவு வாங்குவோம் என்றால் விலை நமது பாக்கெட்டுக்கு ஒத்து வருவதில்லை சுவையான, மிருதுவான சப்பாத்தி செய்வோமா? வீட்டில் அரைத்த கோதுமை மாவு 3 கப், ஒரு கப் மைதா, இதை நன்றாகக் கலந்து கொள்ளவும். 1/4 லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீனி. 2 ஸ்பூன் நெய் அல்லது டால்டா, தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் மாவைக் கொட்டிப் பிசையவும். ஒரே முறையில் திரட்டும் அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் தான் பிசைவதும் எளிது. சாப்டாகவும் இருக்கும், போதவில்லை எனில் சிறிது தண்ணீரை கையால் தொட்டுத் தொட்டுத் பிசையவும். பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி வைத்து இரண்டு மணி நேரம் கழித்து சப்பாத்தி இடவும். மைதா மாவைத் தொட்டுப் போடவும். கோதுமை மாவு கூடாது. அடுத்து புதிய முறை கூட்டுகள் செய்வோமா?
பந்தி 1: வெஜிடபிள் கூட்டு
கேரட், உருளை, பீன்ஸ் தலா 100 கிராம் நைசாக அறியவும், 200 கி. பெல்லாரி, பச்சை மிளகாய் அரிந்து வதக்கவும். பின்னர் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு உப்பு, சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து, வேக விடவும்.வெந்ததும் 2 ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றி கடுகு, உ.பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடங்கள் இறக்கி வைக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: சன்னா கூட்டு
200 கி. முதல் நாள் ஊற வைத்த வெள்ளை கொண்டைக் கடலையை 1 கேரட்டுடன் வேக விடவும். 200 கி. பெல்லாரி, 5 பச்சை மிளகாய் வதக்கி மேற்கூறிய வகையில் கூட்டு செய்யவும். இறக்கி வைத்ததும் பூண்டு பல் 5, சிறிது இஞ்சி தட்டி போடவும்.
பந்தி 3: தக்காளி கூட்டு
200 கி. தக்காளி, 200 கி. பெல்லாரி, பச்சை மிளகாய் அரிந்து வதக்கி மேற்கூறிய முறையில் கூட்டு செய்யவும்.
அப்புறமென்ன, ஒட்டு மொத்த ஓட்டும் சப்பாத்திக்கே. சமையல் போட்டியில் வெற்றி எப்போதும் உங்களுக்கே.
சமையல் குறிப்பு - 33
அறுசுவை ஜீகல் பந்தி
திடீர் என விருந்தாளி வந்து விட்டால் காபி-டீ-யுடன் என்ன கொறிக்கக் கொடுப்பது என்ற திகைப்பைப் போக்க வழி காண்போமா?
பந்தி 1: வெங்காய பகோடா
1/2 கப் கடலைமாவு, 1/2 கப் அரிசி மாவு இரண்டும் சேர்த்து 100 கிராம் சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையும் கிள்ளிப் போட்டு தேவையான அளவு உப்பு, மேற்படி மாவு ஒரு கப், ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசையவும். உதிர்த்தால் உதிர வேண்டும். உருட்டினால் உருண்டையாகப் பிடிபட வேண்டும். இந்த பதத்தில் பிசைந்து காய்ந்த எண்ணெயில் உதிர்த்து சிவந்ததும் எடுக்கவும். முந்திரி நிலக்கடலை சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: ரிப்பன் பகோடா
மேற்படி மாவில் இரண்டு கப் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் பொடி, சிறிது பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். (கெட்டியாகப் பிசைய வேண்டும்).
பந்தி 3: காரச்சேவு
மேற்படி மாவில் இரண்டு கப் நெய் அல்லது டால்டா இரண்டு ஸ்பூன் தேவையான அளவு உப்பு அத்துடன் இரண்டு ஸ்பூன் மிளகை தட்டிப் போட்டு கரண்டியில் தேய்க்கவும். காரச்சேவு கரண்டி இல்லை என்றால் தேன்குழல் அச்சில் பேப்பரில் பிழிந்து சற்று உலர்ந்ததும் எண்ணெயில் பொறிக்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
சாப்பிட்ட உறவினர் அடிக்கடி படை எடுத்தால் என்ன செய்வது? பல்லை நறநறவென்று கடித்தாலும் படை எடுப்பு நிற்காது. பகோடா சுவையின் முன்னே எந்தக் கோபமும் நிற்காது. பகோடா 'அடிட்' ஆனால் நான் பொறுப்பு இல்லை.
சமையல் குறிப்பு - 34
அறுசுவை ஜீகல் பந்தி
பண்டிகை என்றாலே இனிப்பு உண்டு. அதுவும் முன்பெல்லாம் கண்டிப்பாக பூரண போளி செய்வது உண்டு. பூரண போளி செய்வது சிறிது 'ரிஸ்க்' கான வேலை என்பதால் போளி ஓரம் கட்டப்பட்டு விட்டது. எளிய முறையில் புதுவிதமான போளிகள் செய்வோமா? போலி அல்ல போளி.
பந்தி 1: ஜீரா போளி
நூறு கிராம் மைதா ஒரு சிட்டிகை உப்பு, லெமன் கலர் பவுடர் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து அப்பளம் இட்டுப் பொறிக்கவும். அதிக மொர மொரப்பு இன்றி மிதமான தீயில் பொரிக்கவும். 200 கிராம் ஜீனியுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சிறிது லெமன் கலர் பவுடர் சேர்த்து ஜீரா காய்ச்சவும். பொரித்த போளியை சூடான ஜீராவில் முக்கி இரண்டாக மடித்துத் தட்டில் பரப்பவும். உலர்ந்த தேங்காய்த் துருவல் கடையில் கிடைக்கும். அதை மேலே தூவவும். ஜீராவுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் கூடுதல் சுவை.
பந்தி 2: பால் போளி
மேற்படி முறையில் போளியை பொறித்து ஆற விடவும். 1/2 லிட்டர் பால், குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும். கலர் பவுடரும் 200 கிராம் சீனி சேர்த்து ஆறியபின் போளியை பாலில் நனைத்து இரண்டாக மடித்து தட்டில் பரத்தவும். முந்தரி, திராக்ஷை துருவல் மேலே தூவவும்.
பந்தி 3: சுருள் போளி
50 கிராம் பொட்டுக் கடலை, 100 கிராம் ஜீனி, ஒரு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மேற்படி முறையில் போளியைப் பொரித்து, ஒரு தட்டில் ஜீனியைப் பரப்பி அதன்மேல் பொரித்த போளியை வைத்து, பொட்டுக் கடலை மாவு 2 ஸ்பூன் வைத்து பீடா போல் நன்கு சுருட்டி பிரியாமல் இருக்க ஒரு கிராம்பை சொருகவும். சூடான போளியை ஜீனியில் போட்டதும் இளகும். எளிதாக சுருட்ட வரும். இல்லையென்றால் உடைந்து விடும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
இந்தப் புதுவித போளிகளைச் செய்து உங்களது போலித் தனம் இல்லாத அன்புடன் கலந்து அனைவருக்கும் வழங்குங்கள். தீபாவளி வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்பு - 35
அறுசுவை ஜீகல் பந்தி
கோடைக்காலம் வந்து விட்டது. கூடவே குழந்தைகளுக்கு விடுமுறையும் வந்துவிடும். அடிக்கடி நொறுக்குத் தீனி கேட்டு வேலை நிறுத்தம் செய்யும் சிறிசுகள் - அதற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் பெரிசுகள். எத்தனைதான் கடையில் வாங்கிக் கொடுத்தாலும் வீட்டில் எதுவும் செய்யக்கூடாதா என்ற கண்டனத் தீர்மானங்கள். அப்போது தானே எதிர்க்கட்சியாக நின்று கமெண்ட் அடிக்கலாம் என்ற நப்பாசை, இந்த உள்நாட்டுச் சதியை முறியடிக்க அதிரடியாய் களம் இறங்குவோமா?
பந்தி 1: நெய் பிஸ்கட்
100 கிராம் மைதா, இரண்டு ஸ்பூன் ஜீனி, ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு அனைத்தையும் நன்கு பிசைந்து அப்பளம் இட்டுப் பேப்பரில் ஒரு மணி நேரம் உலர வைத்து வில்லைகளாக நறுக்கி எண்ணெயில் பொறிக்கவும்.
பந்தி 2: மிளகு பிஸ்கட்
100 கிராம் மைதா, அரை ஸ்பூன், அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிசைந்து மேலே கூறிய முறையில் நறுக்கிப் பொறிக்கவும்.
பந்தி 3: இனிப்பு பிஸ்கட்
100 கிராம் மைதாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பிசைந்து மேலே கூறியவாறு நறுக்கியப் பொரிக்கவும். 200 கிராம் ஜீனியை ஒரு ஏலக்காய்த் தட்டிப் போட்டு கம்பி பாகாகக் காய்ச்சி பொரித்த சிப்சை கொட்டிக் கிளறவும்.
குறிப்பு
பிஸ்கட் நறுக்கும்போது சோடா மூடியால் தேய்த்து எடுத்தால் அழகாக இருக்கும். விதம் விதமான கலர் சேர்த்து மாவு பிசைந்தால் நாவுக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் விருந்தாகும்.
ஒரு ரகசியம்
இந்த பிஸ்கட் வகைகளைச் சாப்பிட்ட குடும்பத்தினர் அடிக்கும் ஒட்டு மொத்த கமெண்ட்.
ஒன்ஸ்மோர்
சமையல் குறிப்பு - 36
அறுசுவை ஜீகல் பந்தி
வடை பாயசத்துடன் சாப்பாடு என்பது தமிழக விருந்தின் தனிச்சிறப்பு, வழக்கமான வடைகள் தவிர புதிய வடைகள் பற்றியப் பார்ப்போமா?
பந்தி 1: கோஸ் வடை
200 கிராம் உளுத்தம் பருப்பை ஊற வைத்துத் தோல் போகக் கழுவி இரண்டு வற்றல், மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து பூக்கக் கெட்டியாக அரைக்கவும். 100 கிராம் கோஸ் 25 கிராம் கேரட், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய் 1/4 மூடி, 1 ஸ்பூன் மிளகு. ஒரு கொத்துக் கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டவும். வாசனை ஆளை இழுக்கும். தேங்காய் சட்னி கூடுதல் சுவை.
பந்தி 2: தயிர் வடை
மேற்படி முறையில் உளுந்தை அரைத்து வடையைத் தட்டவும். சூடான வடையை ஒரு டம்ளர் மோரில் முக்கி எடுத்து தட்டில் பரப்பவும். 1/2 லிட்டர் கெட்டித் தயிரில், ஒரு கப் அரிந்த சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய் அரிந்து போட்டு 1 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்புத் தாளித்து நன்கு வதக்கி ஆறியதும் தயிரில் சேர்க்கவும். நன்கு கலந்து வடையின் மீது ஊற்றவும். கேரட் துருவல், பச்சைக் கொத்துமல்லி தூவவும். மேலே ஒரு தக்காளி வில்லை வைத்து அலங்கரிக்கவும். சாப்பிடும்போது சிறிது காராபூந்தி தூவினால் சுவையோ சுவை.
பந்தி 3: தவலை வடை
காராமணி, க.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு தலா ஒரு கப் சேர்த்து ஊற வைக்கவும். தனியே ஒரு கப் புழுங்கல் அரிசி ஊற வைத்து 10 மிளகாய் வற்றல் சேர்த்து ரவா பதத்தில் அரைக்கவும். பின் ஊற வைத்தப் பருப்பு வகைகளைக் கழுவி உப்பு போட்டு ஒன்றாக கொர கொரப்பாக அரைக்கவும். ஒரு முற்றிய தேங்காய் மூடியைப் பல்பல்லாக அறிந்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து இரண்டு ஸ்பூன் மிளகு போட்டு பெரிய பெரிய வடைகள் சுடவும். நடுவில் துணை அவசியம் இட வேண்டும். கெட்டிச் சட்னி சரியான கூட்டணி, சிறிய உருண்டைகளாகப் பொறித்தும் சாப்பிடலாம்.
குறிப்பு
இனி தினம் ஒரு வடை என்று குடும்பத்தினர் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றுவர். பாராட்டுக்கள் அடைமழையாகப் கொட்டும். வாரம் ஒருமுறையேனும் இந்த வடைகள் செய்தால் கூடுதல் புரோட்டின் கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும்.
சமையல் குறிப்பு - 37
அறுசுவை ஜீகல் பந்தி
பொதுவாக ஊட்டச் சத்துக் குறைவினால் தான் பல்வேறு வியாதிகள் வருகின்றன. சமச்சீரான உணவைச் சாப்பிட்டு வந்தாலே பாதி வியாதி வராது. மீறி வரும் வியாதியும் சீக்கிரமே குணமடையும். எளிமையான - புதுமையான - சுவையான - ஊட்டச் சத்து உணவு தயாரிப்போமா?
பந்தி 1: மொச்சை கார சுண்டல்
100 கிராம் மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்கு வேக வைக்கவும். 1/2 ஸ்பூன் தனி மிளகாய் பொடி - மஞ்சள் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து 100 கிராம் பெரிய வெங்காயம் அரிந்து போட்டு நன்கு கலக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்து மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், 1 ஸ்பூன் அரிசி மாவை நாலு ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்து மேற்படி கலவையில் ஊற்றி நன்கு புரட்டவும். தேவைப்பட்டால் கிராம்பு, பூண்டு சேர்க்கலாம்.
பந்தி 2: வெள்ளைக்கடலை சுண்டல்
100 கிராம் வெள்ளைக் கொண்டைக் கடலையை மேற்படி முறையில் செய்யவும்.
பந்தி 3: பட்டாணி சுண்டல்
100 கிராம் பட்டாணியை மேற்படி முறையில் செய்யவும்.
இதனை மாலை நேரடியாகவும், மதிய உணவிற்கு சைடிஷ்ஷாகவும் தரலாம்.
மெல்லிய தோசை ஊற்றி மேலே மூடவும். புரட்ட வேண்டாம். மேற்படி கலவையை ஒரு கரண்டி நடிவில் வைத்து இரண்டாக மடிக்கவும். புதுமையான மசால் தோசை ரெடி. கெட்டிச் சட்னி சரியான ஜோடி.
குறிப்பு (இல்லத்தரசிகளுக்கு)
'வெறும் சுண்டல் தானா?' என்ற கிண்டல் இனி இல்லை.
சமையல் குறிப்பு - 38
அறுசுவை ஜீகல் பந்தி
தோசை என்றாலே ஹோட்டல் தோசை போல் இல்லை என்று வெறுப்பேற்றுவர் குடும்பத்தினர். அவர்களை 'இது தாண்டா தோசை" என்று 'ஒ' போட வைப்போமா?
1 கிலோ பச்சரிசி (ரேஷன் அரிசியும் பரவாயில்லை) 75 கிராம் வெள்ளை உளுந்து செர்த்து மைதா பதத்தில் மிஷினில் அரைத்து வைக்கவும். இது திடீர் விருந்தாளிகளுக்கு அமுதசுரபி அட்சய பாத்திரம்.
பந்தி 1: மசால் தோசை
ஒரு கப் மேற்படி மாவில் உப்பு போட்டு ஒரு கரண்டி மோர் அல்லது இட்லி மாவில் ஒரு கரண்டி மாவு சேர்த்து இழைகோல மாவு பதத்திற்கு நான்கு மணிநேரம் முன்னதாகக் கரைத்து வைக்கவும்.
100 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். அத்துடன் 200 கிராம் பெல்லாரி நறுக்கி சேர்க்கவும். தேவையான அளவ உப்பு 1/2 ஸ்பூன் காரப்பொடி, 1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து நன்கு பிசிறவும். கடுகு, உ.பருப்பு தாளித்து பிசிறிய கலவையை நன்கு வதக்கவும். வதங்கியதும் 2 ஸ்பூன் பச்சரிசி மாவை 4 ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றி பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு புரட்டவும். மாலா ரெடி. இத்தோசை மாவை கல்லை நன்கு காயவைத்து விசிறவும். ஊற்றியத் தேய்க்கக் கூடாது எண்ணெய் ஊற்றி நன்கு முழுகியதும் புரட்ட வேண்டாம். நடுவில் மாலாவை வைத்து மடிக்கவும்
பந்தி 2: ஆனியன் தோசை
மேற்படி மாவில் நெய்விட்டு தோசை வார்க்கவும். வதக்கிய வெங்காயத்தைப் பாதி தோசையில் நன்கு பரத்தி இரண்டாக மடிக்கவும். இரண்டு புரட்டு புரட்டி எடுக்கவும்.
பந்தி 3: பேப்பர் ரோஸ்ட்
மேற்படி மாவில் 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம் 1 சிட்டிகை பெ.காயம், கறிவேப்பிலை, நைசாக நறுக்கிய முற்றிய தேங்காய்ச் சில் 2 ஸ்பூன் சேர்த்து தோசை வார்க்கவும் நெய் அல்லது டால்டா 2 ஸ்பூன் ஊற்றவும். இரண்டு ஓரத்தையும் நடுவில் சேர்த்து அதை இரண்டாக மடிக்கவும். எல்லாத் தோசைகளுக்கும் தேங்காய் சட்னி சரியான கூட்டணி. கூடுதல் முறுகல் தேவை என்றால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்க்கவும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
தின்ன தின்ன ஆசை, திகட்டாத ஆசை, முறுகல் தோசை மீது முடிந்திடாத ஆசை என்ற நேயர் விருப்பம் என்றென்றும்.
சமையல் குறிப்பு - 39
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் கூட்டும் பொரியலும் தானா, மதியம் ஊசிப் போய் விடுகிறது. ஊசிப் பட்டாசாய் வெடிக்கின்றனரா குடும்பத்தினர். அவர்கள் முகம் மத்தாப்பு பூவாய் மலர இதோ ரோஸ்ட் வகைகள்.
பந்தி 1: பாகற்காய் ரோஸ்ட்
100 கிராம் பாகற்காயை வில்லையாக நறுக்கவும். 1 ஸ்பூன் தனி மிளகாய் பொடி, 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். 1/4 லிட்டர் எண்ணெய் வாணலியில் வைத்து எண்ணெய் காய்ந்ததும், மேற்படி பேஸ்ட்டை பாகற்காயில் பிசிறி எண்ணெயில் உதிர்க்கவும். சிவக்க வறுத்து எடுக்கவும்.
பந்தி 2: வெண்டைக்காய் ரோஸ்ட்
100 கிராம் பிஞ்சு வெண்டைக்காயை கழுவி மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். மேற்படி பேஸ்ட்டில் புரட்டி மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.
பந்தி 3: வாழைக்காய் ரோஸ்ட்
1 வாழைக்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கவும். மேற்படி டேஸ்டில் புரட்டி எண்ணெய் உதிர்த்து சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
பின்குறிப்பு
பேஸ்டை அப்போதைக்கு அப்போது தான் கலக்க வேண்டும். முன் கூட்டி கலந்தால் நீர்த்துப் போய் விடும்.
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
இந்த ரோஸ்ட்டை சாப்பிட்ட உங்களவர் தானே காய்கறி வாங்க ஆரம்பித்து விடுவார். நீங்கள் ஓய்வாக சீரியல் பார்க்கலாம். இந்த ரகசியத்தை உங்கள் தோழிகளுக்கும் தெரியப்படுத்தலாம்.
சமையல் குறிப்பு - 40
அறுசுவை ஜீகல் பந்தி
வருவது கோடைக்காலம். அத்துடன் குழந்தைகளுக்குப் பரீட்சை ஜீரம் வரும்நேரம் இந்த இரண்டு வெம்மையையும் தணிக்கும்படியான குளிச்சியான சத்தான - சுவையான.
பந்தி 1: தேங்காய் பொங்கல்
50 கிராம் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து கால் லிட்டர் பச்சரிசியுடன் சேர்த்து கழுவி 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஆறு விசில் வந்ததும் இறக்கி தேவையான உப்பு, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துவையல் சிறந்த கூட்டணி. வற்றல் வடகம் பொரித்தால் கூடுதல் சுவை. உடல் சூட்டைத் தணிக்கும்.
பந்தி 2: வெந்தயப் பொங்கல்
ஒரு பெரிய பூண்டை உரிக்கவும். கால் லிட்டர் பச்சரிசியுடன் முதல் நாள் ஊற வைத்த இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வைக்கவும். ஆறு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு 1/4 லிட்டர் பாலைக் காய்ச்சி சேர்க்கவும். காரம் போட்ட ஊறுகாய் சரியான பக்க வாத்தியம். உள் உறுப்புகளின் அழற்சியைப் போக்கி மூளையைக் குளிர்ச்சியாக்கும்.
பந்தி 3: காய்கறிப் பொங்கல்
தக்காளி, காரட், பீன்ஸ், கோஸ், உருளை, பீட்ரூட், பெல்லாரி. ஊற வைத்தப் பச்சைப் பட்டாணி தலா 50 கிராம் நாலு பச்சை மிளகாய் கீறி காய்கறியையும் அரிந்து கொள்ளவும். 4 ஸ்பூன் நெய் விட்டு ஒரு பூண்டு சிறிது இஞ்சி, 2 கிராம் ஆகியவற்றைத் தட்டிப் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கடைசியாக காய்கறியைச் சேர்த்துப் புரட்டவும். 1/4 லிட்டர் பச்சரிசி (பொன்னி) கழுவி 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து காய்கறீகள் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்துக் குக்கரில் வைக்கவும். நாலு விசில் வந்ததும் இறக்கி வைத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். தேவைக்கு ஏற்ப நெய் விடலாம். தேவைப்பட்டால் பிரட் சேர்க்கலாம். தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிட சுவையோ சுவை - சத்தோ சத்து.
பெண்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி
மேற்படி பொங்கலைச் செய்தால் வீட்டினரிடையே பொங்கும் கோபம் தணிந்து மகிழ்ச்சி பொங்கும். என்றென்றும் பொங்கலோ பொங்கல் என்ற கோஷம் வீட்டை நிறைக்கும்.
சமையல் குறிப்பு - 41
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் பருப்பு நெய் போட்டு சாப்பிடுவது சுத்த போர் என்று வீட்டில் போர்க் கொடியா? கவலை வேண்டாம். சுவையான, சத்தான துவையல் செய்து அசத்துங்கள்.
பந்தி 1: எள்ளுத் துவையல்
பிடி எள்ளை வறுத்து தோல் நீக்கவும். நான்கு வற்றல் மிளகாய் கொட்டைப்பாக்கு அளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்த எள்ளுடன் நன்கு அரைக்கவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, மோர் சாதம் என அனைத்திற்கும் சிறந்த கூட்டணி. இளைத்தவர் எள்ளைத் திங்கணும் என்பது பழமொழி! குறைந்த செலவில் நிறைந்த பயன். எனவே தான் ஏழைக்குத் தகுந்த வழக்காயிற்று! நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் நிரம்பியது எள் மட்டுமே. எனவே நீத்தார் நினைவு தினங்களில் எள் உபயோகிப்பது மரபாயிற்று!!
பந்தி 2: கொள்ளுத் துவையல்
பிடி கொள்ளை வறுத்து தோல் நீக்கவும். அத்துடன் ஒரு மிளகாய் வற்றல், உப்பு, சிறிது தேங்காய் இரண்டு பூண்டு பல் சேர்த்து நைசாக அரைக்கவும். இதை சாத்தில் கலந்து சாப்பிடலாம். கொழுத்தவன் கொள்ளைத் திங்கணும் என்பது பழமொழி. இது உடலில் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். குறிப்பாக ஊளைச் சதை குறையும். அதிக சக்தி கிடைக்கும். எனவே தான் கொள்ளு குதிரையின் முக்கிய தீவனமாக அமைகிறது.
பந்தி 3 பூண்டு துவையல்
முழு பூண்டை உரித்து வதக்கவும். ஒரு மிளகாய் வற்றலும், பத்து மிளகும் தனியே வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து லேசாக மசிக்கவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். மிளகு அலர்ஜி நிவாரணி. பூண்டு கொலஸ்ட்ரால் நிவாரணி. இரண்டும் சேரும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.
பின்குறிப்பு: இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
மேற்படி துவையல் செய்யும்போது ஒரு கப் அரிசி சேர்த்து வடிக்கவும். இல்லையென்றால் உங்களுக்கு சாதம் மிஞ்சாது.
சமையல் குறிப்பு - 42
அறுசுவை ஜீகல் பந்தி
தினமும் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்பது பிரச்சனை. தினமும் பொடியும் - சட்னியும் தானா? சாம்பார் வைத்தால் என்ன என்ற கேள்வி நம்மை வெறுப்பேற்றும் காலை அவசரத்தில் பருப்பு விற்கும் விலையில் காலையில் சாம்பார் சாத்தியமா? என்று காலையிலேயே கலவரம் ஆரம்பித்து விடும். இந்த கலவரத்தை ஒடுக்க சுவையான கொத்சு செய்வோமா?
பந்தி 1: தக்காளி கொத்சு
200 கிராம் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் பிசையவும். அதில் கொட்டைப் பாக்களவு புளியை 1/2 தண்ணீர் விட்டு கரைத்து சேர்க்கவும். கடுகு, பச்சை மிளகாய், அரிந்த சின்ன வெங்காயம் கையளவு, 2 வற்றல் மிளகாய் அனைத்தையும் தக்காளி கரைசலில் தாளித்துக் கொட்டவும். மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வாசனை வரும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் அரிசிமாவு கரைத்து விட்டு கொதித்ததும் இறக்கி வைக்கவும். இது சப்பாத்திக்கும் சுவை கூட்டும்.
பந்தி 2: கத்தரிக்காய் கொத்சு
தக்காளிக்கு பதிலாக 200 கிராம் கத்தரிக்காயை அரிந்து வேகவிட்டு லேசாக மசிக்கவும். மேலே கூறியபடி தாளித்து, புளிக் கரைத்துவிட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் கத்தரிக்காய் விழுதைக் கரைத்து உப்பு போட்டு இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி கொத்துமல்லி கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும். இது அடைக்கு சிறந்த கூட்டணி.
பந்தி 3: உருளைக்கிழங்கு கொத்சு
200 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். மேலே கண்டபடி தாளித்து, புளி கரைத்து விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 ஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து விடவும். கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு வாசனை வந்ததும் இறக்கி வைத்து ஒரு துண்டு இஞ்சி தட்டிப் போடவும். 2 கிராம்பு, 2 ஸ்பூன் கடலைப்பருப்பை நெய் விட்டு தாளித்துச் சேர்க்கவும்.
பின்குறிப்பு இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
மேற்படி கொத்சு வைத்தால் இட்லி, தோசைக்கு மீளா அடிமை ஆகிவிடுவார்கள் குடும்பத்தினர். தினம் கிரைண்டர் போடுவதால் கரண்ட் பில் ஷாக் அடிக்கும்.
சமையல் குறிப்பு - 43
அறுசுவை ஜீகல் பந்தி
சமையல் செய்வது என்பது ஒரு ரசமான அநுபவம். சாப்பிடுபவர்கள் ரசனை மிகுந்தவர்கள் ஆனால் சமைப்பவரின் திறன்கூடும். சாப்பாடு ரசனையாக அமைந்தால் வாழ்வே ரசிக்கும். இப்போது சுவையான உடல்நலத்திற்கு உகந்த ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
பந்தி 1 வேப்பம் பூ ரசம்
எலுமிச்சம்பழ அளவு புளியை அரை லிட்டர் அரிசி கழுவிய நீரில் கரைத்து வடிகட்டி தேவையான உப்பு சேர்க்கவும். ஆறு மிளகாய் வற்றல் - சிறிது பெருங்காயம், கடுகு, வெந்தயம், து.பருப்பு, வேப்பம் பூ தலா 1 ஸ்பூன் சேர்த்து தாளித்து கொதிக்க விடவும். கறிவேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும். இது பித்த நிவாரிணி, ஜீர நிவாரணி, பசியும், ருசியும் ஏற்படும்.
பந்தி 2: விளாம்பழ ரசம்
மிளகு, சீரகம், தலா 1 ஸ்பூன் ஐந்து மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கொட்டைப் பாக்களவு புளியை 1/4 லிட்டர் அரிசி கழுவிய நீரில் கரைத்து மேற்படி பொடியைச் சேர்த்து சிறிது விளாம்பழ ஓட்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின் பருப்பு ஜலம் சேர்த்து கடுகு தாளிக்கவும். இது பசியைத் தூண்டும் ஜீரணம் எளிதில் ஆகும்.
பந்தி 3: எலுமிச்சை ரசம்
பெரிய தக்காளி 1, பச்சை மிளகாய் 4, வற்றல் மிளகாய் 2, நெய் விட்டு வதக்கவும். அத்துடன் சீரகம், மிளகு தட்டி சேர்த்து 1/2 லிட்டர் அரிசி கழுவிய நீரில் கொட்டவும். உப்பு, மஞ்சள்பொடி போட்டு கொதிக்க விடவும் கறிவேப்பிலை பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கி வைக்கவும். பருப்பு ஜலம் சேர்த்து ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழியவும். நெய் விட்டு மிளகு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். வாரம் ஒரு நாள் புளி சேர்க்காது சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
பின்குறிப்பு: மனைவிகளுக்கு ஒரு எச்சரிக்கை
இந்த ரசத்தை ரசித்து சாப்பிடும் குடும்பத்தினர் உங்களுக்கு ரசிகர் மன்றமே அமைத்திடுவர். அப்புறம் என்ன? (குடும்ப) ஆட்சி உங்கள் கையில். தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
சமையல் குறிப்பு - 44
அறுசுவை ஜீகல் பந்தி
ஊறுகாய்
இதனைச் சொல்லும்போதே நாவில் ஊறும் நீர், குழம்பு, ரசம் செய்யாவிட்டாலும் அவசரத்திற்கு ஆபத்பாந்தனாய் உதவுவது ஊறுகாய். இதைச் செய்யத் திணறும் இளைய தலைமுறையினர் ரெடிமேட் ஊறுகாயை நாடுகின்றனர். இதன் விலை கேட்டதும் நாவில் நீர் ஊறாமல் உலர்ந்து விடுகிறது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான ஊறுகாய் தயாரிப்போமா?
முதலில் 50 கிராம் மிளகாய் வற்றல், 25 கிராம் வெந்தயம் இரண்டையும் வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்யவும். வறுக்க வேண்டாம். அத்துடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள்பொடி கலந்து வைக்கவும்.
பந்தி 1: பூண்டு ஊறுக்காய்
100 கிராம் பூண்டை உரித்து இட்லி தட்டில் ஆவியில் வேக விடவும். வெந்ததும் மேற்படி காரபொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து கடுகு தாளித்து ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும். இது கொலஸ்ட்ரால் நிவாரணி.
பந்தி 2: நெல்லிக்காய் ஊறுகாய்
1/2 படி நெல்லிக்காயும், தேவையான அளவு உப்பு, காரப்பொடி சேர்க்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு நெல்லிக்காயில் இரண்டு ஆப்பிளின் சத்து உள்ளது.
பந்தி 3: எலுமிச்சங்காய் ஊறுகாய்
சீசனில் அதிகம் எலுமிச்சம்பழம் வாங்கி கழுவித் துடைத்து நான்காகக் கீறி உப்பு வைக்கவும். தினமும் குலுக்கி வெயிலில் வைக்கவும். ஒரு வாரத்தில் தண்ணீர் சுண்டி 'குலோப்ஜாமூன்' பதத்திற்கு வந்துவிடும். எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டிப் போகாது. இதனை அப்படியேயும் உபயோகிக்கலாம். மேற்படி காரப்பொடி சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்தும் உபயோகிக்கலாம். இதில் வைட்டமின் 'சி' உள்ளது. பித்த நிவாரணி.
பின்குறிப்பு: இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
ஊறுகாய் இன்றி இனி உணவு உண்ணோம் என உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவர், ஊறுகாய் ரசிகர்கள் ஆன உங்கள் குடும்பத்தினர்.
சமையல் குறிப்பு - 45
அறுசுவை ஜீகல் பந்தி
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் அலுவலக விருந்தில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் சூப்பின் பெருமையை விலாவாரியாக விளக்குவார்கள் குடும்பத் தலைவர்கள். அதைச் சிறிசுகல் ஆசைப்படும். அந்த ஆசையை நிறைவேற்றினால் கணிசமான செலவு ஏற்படும். பில்லைப் பார்த்ததும் பல்லைக் கடிப்போம். சூப்பின் சுவையே நமக்கும் மறந்து போகும். குறைந்த செலவில் நிறைந்த சத்து மிகுந்த சுவையான சூப் தயாரிப்போமா?
பந்தி 1: ஊட்டச்சத்து பானம்
சுத்தம் செய்த முருங்கைக்கீரை கைப்பிடி அளவு; அரிந்த சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு;
இவை இரண்டையும் 1/4 லிட்டர் அரிசி கழுவிய கழுநீரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் சீரகம் நசுக்கி